Sunday 16 March 2014

மழையிரவுத் துளிகள்

எந்த வனத்தின் 
மழையோ இது
அறியேனில்லை
என் வீதியெங்கும்
பொழிந்தலைகிறது
வேர்கள் வேண்டி
உறங்கும் குழந்தை
எழுப்பி
மழை காட்டும்
தாயைப்போல்
மழைக்கு
எனைக் காட்டி
நிற்கிறது குளிரிரவு


--------------------------------

மழையிரவுகள்
புனிதமானவை
ஆம்
வெள்ளை ஜானி
இறந்தபோது
கழுத்துக்கட்டி உடைந்து
சீழ் ஒழுகியபோது
உயிர்பிளந்த சொல்லொன்று
ஜனித்தபோது
துரோகத்தின் 
இறுதித்துளி வீழ்ந்தபோது
அடக்கிய கண்ணீர்
சிவப்பாய் படுக்கை
நனைத்தபோது
ஏந்தியக் குழவி
விழிநிலைகுத்தி
வெறித்தபோது
எங்கோ
மழை பெய்ததுதான்
இரவையும் தேடி


--------------------------------------
வயது முதிர்ந்த
பரிசாரகன்
இடுங்கிய விழிகளால்
கேள்விகள் உதிர்ப்பதுபோல்
ஈர இலைகள்வழி
நிலமெங்கும்
சுயமற்று சிதறிக்கிடக்கும்
மழைக்குப் பின்னான
இந்த வெயில்


------------------------------------

திட்டுத் திட்டாய் துருவேறிய
இரும்புத் தடியோ
உருகா நீள மெழுகோ
எண்ணெய் புட்டியோ
தாயின் உயிர்நிலையோ
பெண்களின் உதிரமோ
நினைவிற்கு வருமா
அவர்களுக்கு

கயிறு இறுக்கும்
அந்த தேவநொடியில்


--------------------------------
மிகத் தற்செயலாய்தான்
அந்தப் புகைப்படத்தைக்
காண்கிறேன்
அதனினும் இயல்பாய்
அந்தப் பெயரைக்
கேட்கிறேன்
அதிவேகமாய் விழிகள்
நகர்த்துகிறேன்
உலகின் ஒலியெலாம்
அழிந்திட வேண்டுகிறேன்
இனி எனக்காய்
ஆகும் அனைத்திற்கும்
நான் மட்டுமே
காரணியில்லை
உனக்கான காரணிகளில்
இனியெப்போதும்
நான் இடம்பெறப்
போவதுமில்லை


-----------------------------------

தொடர்ந்து கவனம்
கலைத்துப் பொழியும்
இந்த வானம்
பரல்தெறிப்பாய்
பரவும் ஓசையோடு
துளிகள் சங்கமித்து
பெருக்கெடுத்து ஓடினும்
கழிவுநீரோடை ஓரம்
கசகசத்த மண்சுவரும்
ஒழுகும் கூரையுமாய்
சிறுகுடிசைக்குள்
வாராத வாடிக்கையாளனுக்காய்
காத்திருந்து காத்திருந்து
பசியால் சுருண்டுமிருந்த
புதின நாயகி மட்டும்
விழிமுன் வருவதுதான்
எத்தனைக் கொடிய
நினைவு மீட்டல்



---------------------------------------


புழுக்கமும் நெரிசலும்
வியர்வை தோய்ந்த
வாசனைதிரவிய நெடியும்
கடந்து
பின்னங்கழுத்தில்
மெலிதாய் ஊதி
தன் இருப்பை
நிரூபிக்கும் அவனுக்கும்
தெரியும்
எழும்ப மறுக்கும்
உணர்வுகள்
வரமாகலாம்
என்றேனும்


---------------------------------------


புதிதாய் கட்டிய
வீட்டினுள்
தயங்கித் தயங்கி
நுழையும் இரவிடம்
எவ்வாறு சொல்வது
இருளலைகளுடன் வெளியேற
பின்வாசல் இல்லா
இல்லமதுவென


---------------------------------------

நானும்
இரவும்
மழையும்
கூடித் தனித்திருக்கும்
விசித்திர ஏகாந்தமிது
சன்னமாய் ஒலிக்கும்
எதுவும் கூட
வேண்டாமிப்போது
ப்ரத்தியேகமாய்
தனிச்செய்தியொலி
வேண்டவே வேண்டாம்


-----------------------------------------

கண்ணாடியோ
புகைப்படமோ
அகன்ற வாளி
நிரம்பிய நீரோ
மற்றோர் விழியோ
இல்லாத அறையொன்றில்
வெகுநேரமாய்
நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை நானே
பார்த்தபடி
அறையிலிருந்து
முதலில் யார் வெளியேறுவது
அறியவில்லை
இருவருமே


-----------------------------------------

ஜன்னல்வழி
இருகரம் நீட்டி
கொஞ்சமாய்
மழை ஏந்தி
உற்று நோக்கினேன்
வழிமறந்த
பொழிமுகிலொன்றாய்
வீற்றிருந்தது
பெருமழை
உள்ளங்கைச் சூட்டினுள்

5051Like ·  · Promote · 

------------------------------------மழையோடு சேர்ந்து
பொழிந்து 
போகவேண்டும்
இரவொடு கூடி
அமிழ்ந்து
போகவேண்டும்
இல்லையேல்
மழையிரவாய்
முடிந்தேனும்
போகவேண்டும்

--------------------------------------------


No comments:

Post a Comment