Sunday 16 March 2014

சிகை

ஐந்தாம் வகுப்புவரை
பாப் கட் தான் வைத்திருந்தாள் 
பெண்ணென்றால் கூந்தல்
என்பதுவும் குறியீடு
என உணர்ந்த தாய்
மெனெக்கெடத் தொடங்கியதும்
அடர்பச்சை மூலிகை எண்ணெயும்
வெட்டிவேர் மிதக்கும்
நாட்டுத் தேங்காயெண்ணையும்
மாதாந்திர மளிகைப்பட்டியலில்
வந்து சேர்ந்தன
பேனும் ஈரும் மண்டாதிருக்க
கற்பூரமிட்டுக் காய்ச்சிய
நல்லெண்ணைக் குளியலுக்கு முன்னர்
வேப்பங்கொழுந்து ஊறல்
அமாவாசை முடிந்த
மூன்றாம் நாள்
நுனிமுடி கத்தரித்தல்
சோற்றுக்கஞ்சியிலிட்ட சிகைக்காய்த்தூளிட்டு
துணி துவைப்பதுபோல்
முதுகில் வைத்தே அலசுவாள்
முட்டை கலந்த
ஹாலோ ஷாம்பூதான்
வெளியூர் சென்று விட்டால்
ஈரம்போக உலர்த்துகையில்
யார்கண்ணும் பட விடமாட்டாள்
டாம்ப்கால் நடத்திய
கல்லூரிப் போட்டிகளிலும்
பங்குபெற்றவளில்லை

உச்சவலியில் அலறியவள்
ஏனோ வேண்டிக்கொண்டாள்
சுகமாய் பிரசவம் உண்டாக்கினால்
முடிகாணிக்கை தருவதாய்
மலைக்கோவில் முருகனுக்கு
அம்மாவும் தடுக்கவில்லை
நேற்று ஸ்பரிசித்த சிசுவின்
உதிர வாசமூறிய
மென்சிகைத் தடவியவள்
தன்னிலை மறந்து
தொலைந்துபோனாள்
இதுவரைக் கண்டிராத
கரும் வனத்தினுள்

No comments:

Post a Comment