Saturday 5 April 2014

கவிதைத் துளிகள்

எழுநூற்று ஐம்பதாவது
படியில்
பாதங்கள் தன்னிச்சையாய்
துடிக்கின்றன
துளி விடத்தில் யானை கொல்லும்
ஆப்பிரிக்கப் பாலைவனப்
பாம்பின் வால்நுனிபோல்

மீதமிருந்த படிகள்
மெல்லியதாய் அசைகின்றன
அதே ஆப்பிரிக்க பாம்புபோல்
----------------------------

எண்ணற்றப் படிகள்
கடந்து வந்து
இறுதிப் படியிலிருந்து
நிலம் பாவிய பின்னரும்
இல்லாத
அடுத்த படிக்காய்
உயரும் பாதம்போல்
முடிந்து போன
அத்தியாயத்தின் பின்னே
தடுமாறி நிற்கும்
வாசிப்பு

------------------------------

பின்னிருக்கையில்
நிர்வாணமாய்
அமர்ந்து வரும் வெயில்
உடலும் முகமும் மூடிய
இருசக்கர வாகனஓட்டிப்பெண்

-------------------------------

விழுதுபோல்
வழியும் வெயில்
மரங்களின் ஊடாய்

--------------------------------

மணியசைய வந்த
கோவில்யானை
பிங் பாங் காலணி
சப்தமிட நடந்துவந்த
குழந்தை
இருவரையும்
ஓடிச் சென்று பார்க்கும்
நான்

-------------------------------

சரிந்துகிடக்கும்
செங்கற்குவியல்
விடத்தின் வெப்பம்
தாளாது
எட்டிப்பார்க்கும்
செந்தேள்

-------------------------------

வரலாறு என்பது
சோரம் போனவர்களால்
தூக்கி நிறுத்தப்படுவது
அதுவே
அதிமுக்கிய
வரலாற்று நிகழ்வும் கூட

------------------------------

மலைக்காய்ச்சலில்
வலிப்பு வந்து
கருச்சிதைவானவள்
வரிகளினிடையில்
சுருண்டு கிடக்கிறாள்
அனிச்சையாய்
அடிவயிறு தடவி
மீள்கிறது
புத்தகம் ஏந்தாத
மறு கை

---------------------------

கரைந்து விழுந்த
வரிகள்
உங்கள் மார்புகளின் மேல்
விழுகின்றன
உறிஞ்சிய பாலை
சிசு மீண்டும்
தாய்க்குள்ளே செலுத்துவதுபோலே
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
வரிகள்
உங்களுள் செல்கின்றன

---------------------------

உங்களுக்குப் புரிகிறதா
ஒரு குழந்தையின் வருகையோ
ஒரு புத்தகத்தின் வருகையோ
உங்களை
மொத்த உலகத்திடமிருந்தும்
இயன்றால்
உங்களை உங்களிடமிருந்தும்
அந்நியப்படுத்துவதை

---------------------------------

மலர்களை நுகரும்
மஞ்சள் வெயில்
நீர்தெளித்து விரட்டுகிறாள்
மலர்ச்சரம்தொடுப்பவள்

---------------------------------

ஓய்வூதியப் பணம்பெற
குடைக்குள் செல்லும்
முதியவர்
செல்ல நாய்க்குட்டிபோல்
அவர் முன்னும் பின்னும்
ஓடும்
வெயில்

--------------------------------

மரநிழலின் கனம்
தாளவில்லை
வேர்களுக்குள்
புதைந்த வெயில்

--------------------------------

இன்னும் அணியப்படாமலேயே
ஒரு புத்தாடை
அலமாரியில் இருப்பது
அவளுக்குத் தெரியாது

------------------------------

நடுநிசி விழிப்புகளில்
அவளின் பெயரழைத்து
நான் தேடியதாக
எவரேனும் கூறினாலும்
கடும் குழப்பமாய்
சிந்திக்கத் துவங்கினேன்
எந்தப் பெயர்கொண்டு
அவளை விளித்திருந்தேனென

-----------------------------
அதன் பிறகும்
அவளுக்காய்
படுக்கையில் இடம்விட்டே
உறங்கத் துவங்கியிருந்தேன்

--------------------------------

நீண்ட நேரமாய்
அவள் பாதங்களை
கைகளுக்குள் பொதிந்திருந்தேன்
உயரக்கிளை மரமல்லி
சப்தமில்லாது கழல்வதுபோல்
அவள் வெப்பம் உதிர்வதை
மிகத் துல்லியமாய்
உணர்ந்திருந்தேன்

--------------------------------


No comments:

Post a Comment