Sunday 16 March 2014

கடலானவள்

நீலத்திமிங்கலமாய் மாறி
கடலளக்க விரும்பிய
ஒருத்தியை அறிவேன்
அவள் பேச்சில்
உப்பும் மீனும் கலந்த
மென் வாசமிருக்கும்
அவளைப் பறத்தலுக்காய்
பணித்திருந்தபோதும்
நீந்தவே பிரியப்பட்டாள்
ஈரச்சிறகுகளுடன்
நெடுந்தூரம் செல்வதையும்
எப்படியோ சாத்தியமாக்கினாள்
கடல் கடல் கடல்
என முனகியவள்
சுவாசங்களிலும்
குமிழிகள் சிதறியபடி இருந்தன
விழிகளுக்கு இமை பாரமென்றாள்
செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள்
எனக்குத் தெரிந்ததெல்லாம்
அவளின் பலவண்ணச் சிறகுகள்
மட்டுமே
முழு பவுர்ணமி நாளொன்றில்
கடற்கரையில் அவளைக்
கண்டெடுத்தபோதும்
நீலச் சேலை அணிந்திருந்தாள்
அன்று கடல் நீலமாயிருக்கவில்லை
பெரிய அலையொன்று புரட்டியதும்
அவள் உடலெங்கும்
மெல்லியதாய் முளைத்திருந்த
செவுள்களைக் கண்டேன்
உதிர்ந்துகிடந்த இறகுகளை
பொறுக்கிக் கொள்ள
கடல் மெல்ல
மேலேறி
வந்து கொண்டிருந்தது
அவளை நோக்கி

No comments:

Post a Comment