Sunday 16 March 2014

தூரிகை அறியும்

எத்தனை நீள விரல்கள்
தூரிகையோடு ஓடும் அவை
தீட்டும் கோடுகளெல்லாம்
உடனே உருவம்பெறுவதை
வியந்து ரசித்தபடி இருந்தபோதே
தீர்க்கமாய் வந்துவிழுந்தது
அந்த வாக்கியம் உன்னிடமிருந்து
அப்போதும் நான்குவிழிகளும்
ஓவியத்திலே தான்
நிலைத்திருந்தது என்பது
இன்றுவரை இருவருக்கும்
வியப்பான ஒன்றுதானே
அன்றே உனக்கு பதிலுரைத்திருக்க
வேண்டிய நான்
ஆகப்பெரிய நகைச்சுவை கேட்டதாய்
உன்னிடமே சிரித்துவிட்டிருந்தேன்
பெருங்குரலெடுத்து
அதற்கான காரணங்கள்
நீயும் அறிந்திருந்தாய்
நீ நகைத்தாயா என்பதுகூட
தெரியாதவாறு ஓவியத்தில்
லயித்திருந்தாய்
பிரிவின் இறுதிநொடிவரை பிறகு
நீ அந்த வாக்கியம்
உதிர்க்கவேயில்லை
எதிர்பாரா சந்திப்பொன்றில்
நலம் விசாரிக்கிறாய்
நலமாய் இருப்பதாயும் சொல்கிறாய்
அந்தச் சிரிப்பிற்காய் மன்னிப்புக்கோர
எனக்குத் தெரியவில்லை
அன்று நீ நகைத்தாயா என
வினவவும் இயலவில்லை
இதோ நான் விடைபெறுகிறேன்
இப்போது நகைத்துவிடாதே
உன் தூரிகைகளுக்கு
எல்லாம் தெரியும்

No comments:

Post a Comment