Sunday 16 March 2014

இரவு

மூங்கில் கழிகளை
கரையான்கள் அரித்தெடுக்கும்
ஓசையினூடே
பயணிக்கும் இரவுகள்
சலங்கைகள்
அணிந்திருந்ததாய்
ஞாபகம்

-------------------------------------------

விழிப்புகளின் பின்னும்
படுக்கைவிரிப்புக் கசங்கலில்
ஓய்வெடுக்கும் இரவுகள்
மிக வசீகரமானவை

-------------------------------------------

ஒரு இரவின்
முதல் மூச்சினைப்போலவே
இறுதி மூச்சையும்
எவரும் அறிவதில்லை
இரவும் அறிவதில்லை

--------------------------------------------
கேடயமாய் நீளும்
இரவுகளே
பல நேரம் ஆயுதமாய்
மாறும்
குருதியாய் வழியும்
இருளில்
எதுவும் புலப்படுவதில்லை
ஆம்
எதுவும்

--------------------------------------------

ரம்மியக் கனாக்களின்
இடைவெளிகளில் நுழைந்து
ரசிக்க மட்டுமேனும்
இரவுகளை
அனுமதிக்கலாம்

-----------------------------------------------


பகல்சாலையெலாம்
இரவின் கரைகளில்
முடிந்து
பிறிதோர் நொடியில்
இங்கிருந்தே
தொடரும்

------------------------------------------------

திமிறித் திரண்டெழும்
கரும் அலைபோல்
கவியும் இந்த இரவில்
ஏக்கப் புள்ளியெனக்
கரைந்து இல்லாதுபோதலும்
சாத்தியமே


No comments:

Post a Comment