Sunday 16 March 2014

மழை

முழுகோதுமை ரொட்டிகளும்
நிஜ ப்ரென்சு ஆட்களும்
காண்களும் சொல்தாக்களும்
மல்லாட்டை கொட்டைகளும்
மணக்குள விநாயகரின்
அடுத்த வீதியில் அன்னையும்
பாறாங்கற்கள் தடுப்பு
கடற்கரையும்
ஜவ்வுதாள்களுமாய்
நிறைந்து கிடக்கும்
அந்த வாழ்வில்
கொஞ்சமாய் தேடிக் கண்டறிய
கொஞ்சம் நானும்
இருக்கிறேன்தான்


-----------------------------------------

சவுக்குமரக் கட்டைகள்
எரித்து சூடாக்கிய
தைலமர இலைகள்
மிதக்கும் அந்த
பால்யகால குளியல்நீரின்
வாசமும் வெதுவெதுப்பும்
எல்லா மழைகளிலும்
எங்கனம் இருப்பதென்பது
மட்டுமே
இன்றுவரை மழை என்னிடம்
சொல்ல மறந்த ரகசியம்


----------------------------------------

இத்தனைச் சிறிய சாளரம்
காட்டிய மழையின்
குதூகலம் இவ்வளவெனில்
முழு மழை காண்பதென்பது
மெலிதாய் அச்சமூட்டுவதாய்தான்
இருந்து விடுகிறது


---------------------------------------

தொடர்ந்து மனிதர்கள்
விழுங்கும் ராட்சதன்
தன்னையுமறியாமல்
கண்ணயர்ந்ததுபோலே
கிடக்குமிந்த
மாநகரம் பெருமழையில்


-----------------------------------

ஒரு பெருமழைக்குப் பின்னான
வெயில் அமர்ந்திருக்கும்
நாற்காலிகள்தான்
எத்தனை அழகானவை
மழையைப் போலவே


---------------------------------------
சிறந்த ஆறுதல்போல்
பொழியும் இந்த இரவை
எந்தக் காயத்தின் மீது
பூசிக் கொள்வது
எனும் தடுமாற்றமும்
ரம்மியமாய்தான் இருக்கிறது


--------------------------------------

குறுகிய பாதையின்
முடிவில்
விரிந்து கிடக்கும்
கடலாய்
கிடக்குமிந்த இரவை
மழை மோகிக்கும் காட்சி
ஏனித்தனை
நாணங்கொள்ள வைக்கிறது


----------------------------------------





No comments:

Post a Comment