Tuesday 11 March 2014

அபத்தக்கனா

அந்த வீதியில் உணவகங்களே இல்லை
மிகப்பிடித்த நீலக் கமீசணிந்து
பசியோடு அலைகிறேன்
வீதிமுனையில் ஒரு திடீர்ப்புகைபோல் தோன்றி
என் விரல்பற்றி மருந்தகமொன்றுள்
அழைத்துச் செல்பவளை
என்றோ திரையில் பார்த்த ஞாபகம்
இப்போது பிரபல தையலகம்
இருக்கும் இடத்தில்தான் அந்த மருந்தகம் இருந்தது
அவள் ஏன் சீசா நிரம்ப
மாத்திரைகள் வாங்குகிறாள்
விற்பனையாளர் என்னை பற்றி
அவளிடம் ஏதோ வினவுகிறார்
பதிலுரைக்காது என்னை இழுத்துக் கொண்டு
அதே வீதியில் விரைகிறாள்
பசி இன்னும் நெருக்குகிறது என்னை
அவள் கரம் போலவே
சிறுகடையொன்றின் முன் நிற்கிறேன்
அவளின் இழுப்பிற்குச் செல்ல மறுக்கிறேன்
கண்ணாடிக் குடுவை மிட்டாய்கள்
எனக்கு முற்றிலுமாய் மறுக்கப்படுகின்றன
என்னைப் போன்றே சில சிறுமிகள்
கற்களோடு கடைவாசலில்
என் கையிலும் ஒரு கல் திணிக்கப்படுகிறது
கடை உரிமையாளன்
மிகுந்த சிவந்த நிறமாய் இருந்தான்
நானெறிந்த கல் அவன் கபாலம்
பிளந்ததும் கடையில் தீப்பிடித்தது
கருகிய வாசம் நுகர்ந்துகொண்டே
காவல்துறையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்
என் இந்நாள் காதலன்
அந்தக் கடையின் மிட்டாய் மிகுந்த ருசி
தற்போது அதை இழந்துவிட்டதற்காய்
மிகவும் வருத்தப்பட்டான்
நான் ஏன் எவர் விழியிலும்
சிக்காமல் இருக்கிறேன்
பசியோடு நித்திரைக் கொள்வதுதான்
எத்தனை
ஆபத்தாகவும் அபத்தமாகவும்
இருந்து விடுகிறது
என வியந்து கொண்டே
பசியினால் தளர்ந்து கடைகளைக்
கடந்துச் செல்கிறேன்
மாத்திரை சீசாக்காரி விழிகள் குத்திட்டு
படுக்கையில் இறந்து கிடக்கும் காட்சியுடன்
தினத்தாள் கடையொன்றில் தொங்குவதை
நான் கவனிக்கவே இல்லை

1 comment:

  1. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete