Sunday 16 March 2014

வேடம்

அருகிலிருக்கும் மேஜையில்
அவர்களையும் ஜோடிகளாய்தான் காண்கிறேன்
விழிவழி உயிர்பருகும்
வித்தையறிந்திட்டோர் போலும்
கொஞ்சமாய் நீயும் விழியுயர்த்தேன்
அந்தப் புத்தகத்திலிருந்து
ஏதேனும் பேசேன்
உன் பற்தடம் பதிந்த
சாண்ட்விச் என்னிடம் நகர்த்தி
ஓரக்கண்ணால் புன்னகைத்திடேன்
குளிர்ந்தநீர்நிறைக்கோப்பை
பற்றிய விரல்கள் தீண்டேன்
நேற்றிரவு என்ன படித்தாய்
என வினவேன்
பத்தாம் வகுப்பில் பெற்ற
மதிப்பெண்களேனும் விசாரியேன்
உலர்ந்த உதடுகளை
எச்சில்படுத்தச் சொல்லேன்
திடுக்கிட்டு நிமிர்பவளிடம்
குறும்பாய் கண் சிமிட்டேன்

இந்த மோனமும்
துல்லிய நடுக்கமும் பரிசளிப்பதாய்
இருந்தால்
அடுத்த சந்திப்பில் என்னையும்
புத்தகமேதேனும்
கொண்டு வரச் சொல்லேன்
இல்லையேல்
அருகிலிருக்கும் மேஜையில்
அந்த ஜோடிகள் இல்லாதவாறேனும்
நிச்சயம் செய்து கொள்ளேன்


-------------------------------------------------
சென்ற முறை பாதிப்பு
அதிகம் அவளுக்கு
அமாவாசை தினமொன்றில்
பேசத் தொடங்கினாள்
இரவெலாம் உறங்கவில்லை
அவள் தாய் எங்கோ வெறித்தபடி
மவுனக் கண்ணீருடன்
அவள் சன்னமாய் பேசினாள்
பேசிக் கொண்டே இருந்தாள்
இரவு பகல் திரைகளில்லை
சுழலும் மின்விசிறி நோக்கி
எப்போதும் பேசினாள்
எவருமில்லா பொழுதில்
அவளுடன் அதுவும் பேசியிருக்கலாம்
பின்னங்காலில் படுக்கைப்புண்கள்
அவள் பேசினாள்
ரத்தம் தோய்ந்த பஞ்சுகள்
அவள் பேசினாள்
மருந்துகள் தோற்றுக் கொண்டிருந்தன
அவள் பேசினாள்
மின்விசிறி வேகம் குறைகிறது
அவள் பேசினாள்
இறுதியாய் பேசிய சொல்
மூன்றாவது இறக்கையில்
சிக்கிக் கொண்டிருந்ததாய்
அவளுக்கு நினைவு
மின்விசிறி மீண்டும்
சுழலத் தொடங்குகிறது
உதிர்ந்த சொல்
வெற்றுப்படுக்கையில்
சன்னமாய் வீழ்கிறது


-------------------------------------------------------------

உங்கள் வேடங்கள்
அலுப்பூட்டுகின்றன
புரிகிறதுதானே
என் வேடம்
நான் களையும் நேரம்
எவரும் இங்கிருப்பது உகந்ததல்ல
உம்சார்ந்த அனைத்தும்
உம்மிடமே உரைத்தபிறகே
அரிதாரப் பூச்சழிப்பேன்
அதிலெந்த மாற்றமுமில்லை
உங்கள் அரிதார அடுக்குகள்
அச்சுறுத்துபவை
என்னையல்ல
உங்களால் உரித்தெடுக்க
இயலாதவை
எவராலும்தான்
இருள்மூலையில் கிடந்து
நீங்களே அழிக்கும்வேளை
அங்கு நீங்களிருப்பது
உகந்ததல்ல
உங்களுக்கும்தான்


--------------------------------------------------

No comments:

Post a Comment