Thursday 27 February 2014

விசுவாசித்தலும்

நோவா பேழையின்
இருள் மூலை கிடந்த
வெண்பன்றியின்
தகனபலிக்கான நடுக்கம்
குளிரினால்தானென
ஹீப்ரூவில்
மொழிபெயர்க்கப்பட்டதும்
பூமிக்கு மேலாகத் தோன்றிய 
முகில் வில்லின் வண்ணங்கள்
பன்றியறிய வாய்ப்புகள்
தரப்படவில்லை

காகம் பற்றி
எவரும் கவலைப்படவில்லை
அது ஒன்றும் அத்தனை
நித்திய ஜீவனில்லைதானே

ஒலிவ இலையுடன்
திரும்பிய புறா
பலிபீடத்திலிருந்து
தப்பிக்கவே உடன்படிக்கைகள்
இடப்பட்டதாய்
பன்றியும் நம்பியது

ஆயுள் குறைக்கப்பட்ட
மனிதன் பலிவரிசையின்
இறுதியில் இருந்திருக்கலாம்

கொழுத்தக் கழுத்தின்
இறுதி நரம்புமுடிச்சை
கூர்முனை சுவைக்கும்முன்
தலை உயர்த்திப் பார்த்த
பன்றியின் கண்களில்
தெரிந்ததென்ன
தரைதட்டிய கலமாய்தான்
இருக்குமென
அதன் கருவில் புரண்ட சிசு
இறைவனுக்காகவும்
விசுவாசித்தது

No comments:

Post a Comment