Tuesday 8 April 2014

துளிகள்

இலக்கியவாதியாக
என்னவாக வேண்டுமென
முதல் புழுவிடம்
கேட்டது இரண்டாவது

நீ பிறந்த இடம்
நீ பிறந்த குலம்
நீ பெண்ணெடுத்த
அல்லது பிள்ளையெடுத்த இனம்
நீ வாழும் வீதி
எல்லாம் கொண்டு
நிர்ணயிப்போம்
நீ இலக்கியவாதியாவென

முதன்மையாய்
நீ முகநூலில் இருத்தல் அவசியம்

உன்னைப் பற்றி
உன் இனமானவன்
உன்னைப் போற்றி
வெளிக்கொணர்தல்
அதைவிட அவசியம்
என்றது
முதல் புழு

இலக்கியமென்பது
இதில் எங்கு வருகிறது
மீண்டும் வினவியது
இரண்டாவது புழு

இது மட்டுமே
இலக்கியமெனச் சொல்லி
தடியூன்றி நடந்துச் சென்றது
முதல் புழு

-------------------------------

நாளெல்லாம் சேர்ந்தக்
கழிவுகளையெல்லாம்
நெகிழி உறையிலிட்டு
இரவே வாசலில்
வைத்துவிட வேண்டும்
பெருநகரச்
சுகபோக வாழ்வில்

மணியடித்தபடி
அதிகாலை
பச்சை வண்டியில்(அரசியல் வேண்டாம்)
வரும்
மாநகராட்சி ஊழியன்
அவற்றை அகற்றும்வரை
இரவோடு சேர்ந்து
எலிகளும்
நாய்களும்
பூனைகளும்
கழிவுகளை ருசிபார்க்கும்
இந்த நொடியில்தான்
நானும் இதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

சுகபோகங்களில்
இதுவும் ஒன்றே என
நீங்களும்
நம்பித்தான் ஆகவேண்டும்

---------------------------------

முழுதாய் படித்து
முடிக்கும் முன்பே
புத்தகம் மூடியெழுந்து
சமையலறை நோக்கி
நடப்பவளின்
பின்னிருந்து
கதறும் எழுத்துகளை
வாரியணைக்க
ஓடிவருகிறது
படித்து முடித்த
முந்தைய எல்லாமும்

---------------------------------

கண்ணாடிச் சட்டத்திற்குள்
இருப்பவளிடம்
பேசியபடியே இருக்கும்
மல்லிகைச்சரம்

அவளின் ஒவ்வொரு சொல்லுக்கும்
ஒரு பூ உதிர்கிறது

விழித்திருந்து ரசிக்கும்
இரவுக்கோ
கொள்ளை வியப்பு

இழந்த மலர்களுக்கீடாய்
சரமெங்கும்
அவள் சொற்கள்

------------------------------------

அந்தச் சரணத்திற்குப்
பின்னான பல்லவி
தொடங்குவதற்குள்
உங்களுக்கானப் பாடல்
முடிந்திருந்தது

---------------------------------

சரணத்தில்
அத்தனைக் கவித்துவம்
புகுத்தாதீர்கள்
பல்லவியில்
இத்தனை மோகம்
கூடியிருப்பதை
கவனித்தீர்கள்தானே

---------------------------------

நீலவண்ணப் பறவை
மாந்தளிர் வண்ணப் பறவை
இரண்டும்
வியந்துகொண்டே கூடுகின்றன
கடம்ப மரக்கிளையில்

முந்தைய வியப்புகளெல்லாம்
இலைகளாக மாறியிருந்த
மரத்திற்கு
இதில் வியப்பேதுமில்லை

-----------------------------------

காற்றின் கடலில்
நீந்துமெனக்கு
செதில்கள் இல்லாதது
ஏனென
இன்றும் வினவியது
தொட்டி மீன்

----------------------------------

இரவு பரணிலிருந்து
இறங்கிய பூனை
தொலைக்காட்சித் திரையில்
விட்டுச் சென்றிருந்தது
காலடித் தடங்களை
அதிகாலை செய்திவாசிப்பவரின் முகத்தில்
பூனைக்களை

----------------------------------

1 comment: