Tuesday 8 April 2014

கருப்பைத் துரோகம்

முப்பத்தைந்து வயதில்
கட்டி வந்ததால்
கருப்பை நீக்கிய
இரண்டு குழந்தைகளின் தாயை
சந்தித்தேன் இன்று
சம்பிரதாயப் பழங்களுடன்

கத்தியே படாமல்
மிக நவீன முறையில்
அறுவைசிகிச்சை முடிந்ததையும்

மருத்துவமனையின் துல்லியமான
சுகாதாரத்தையும்
சிகிச்சையளித்த மருத்துவர்களின்
வெளிநாட்டு உயர்படிப்புத் திறமைகளையும்

இரண்டே நாட்களில்
சகஜவாழ்விற்குத் திரும்பிவிட்டதின்
மாயத்தையும்

சன்னக் குரலில் பகிர்ந்தபடி இருந்தவள்
இறுதியாய் அந்தக்
கேள்வியைக் கேட்காமலேயே
என்னை வழியனுப்பியிருக்கலாம்

குழந்தைகளுக்கு
ஏதேனும் வலியென்றால்
அடிவயிற்றில் ஏதோ
ஒன்று புரண்டு கதறுமே...
அதற்கு நான் துரோகம்
செய்யவில்லைதானே?

No comments:

Post a Comment