Saturday 12 April 2014

அருள்மேரி மிஸ்

வரலாறு ஆசிரியைதான் 
எனினும் திகில்கதைகள்
சொல்வார் அருள்மேரி மிஸ்
உணவு வீணாக்கியவள்
கழிவோடைப் புழுவின்
பிறப்பெடுப்பாள் எனவும்
இரவுகளில் புலால் உண்பவன்
சாத்தானின் சகோதரனாவான்
எனவும் பல கதைகள்

நீதிக்கதைகளாய் அல்லாதிருத்தலே
எங்களின் தேவையாயிருந்ததில்
வகுப்பின் சரிபாதி நேரம்
கதைகள் சொல்லியவர்
ப்ரிம்ரோஸ் மிஸ்ஸைக் கண்டால்
முகம் திருப்பிச் செல்வார்

புதிதாய் பல பொறுப்புகள்
கைமாறியிருந்தது
அருளிடமிருந்து ரோசிக்கு
ரோசியின் வயதும்
காரணமாயிருக்கலாம்
ஆம்
பள்ளித் தாளாளர் முதியவர்

நாற்பத்தைந்து வயதின்
படிமங்களுடன்
கருவறைத் திறவா
அருள்மேரி
ஸ்தோத்திரங்களுடன்
வாழ்ந்ததில்
வியப்பேதுமில்லைதான்

இன்றும் நினைவிருக்கும்
அந்த நாளின் முடிவில்
பள்ளி வளாக ஆலயத்தில்
குழந்தை யேசுவின்
விழிகள் கண்டு
புலம்பியபடியே அழுத
அருள்மேரிதான் நாங்கள்
இறுதியாய் கண்ட
அவர் சார்ந்த காட்சி

எந்த திகில்கதையினுள்ளும்
தன்னைப் பொருத்தவியலாது
தோற்றுப்போன
மேரிமாதாவின் வரலாறுகளை
அருள்மேரி மிஸ்
எங்கேனும் விவரிப்பதாய்
வரும் கனவுகளில் மட்டும்
குழந்தை யேசு ஏன்
அழுதபடியே இருக்கிறார்
முன்னிருக்கை மாணவனாய்

No comments:

Post a Comment