Tuesday 8 April 2014

இரவுகள்

இரவுப்பூனைகளுக்கு
பெரிதாய் விதிகளில்லை
இரவுகளைப் புணர்கையில்
நகக்கீறல்களும் பற்தடங்களும்
பூனையுடையதைப் போலவே
இருக்க வேண்டுமென்பதே
அவற்றின்
ஒரே விதி

-----------------

கழிமுகம்வழி
மேலேறி வரும்
வயது முதிர்ந்த கலம் போல்
அசைந்துவரும் இரவில்
எதுவுமே நேர்வதில்லை
நேராய்

----------------

இரவின் கனம் தாளாது
அழுத்தம் கூடும் இசை
உங்கள் கனவுகளின்
இடுக்குகளில் வழிந்தோடுவதை
இன்றேனும் உணருங்களேன்

----------------

அதிரும் வீணைநரம்பிலிருந்து
தெறித்து விழுந்த
உறைபனித்துகள் போல்
அத்தனைக் குளிர்ச்சி
இரவுகளில் கேட்கப்படும்
இசைக்கு

---------------

இருள் ஓர் அணை
போல் சூழ்ந்திருக்க
கனமாய் வெளியே
தேங்கி நிற்கும்
இந்த இரவை
எந்த மதகு வழி
உள்ளழைப்பது

---------------

No comments:

Post a Comment