Tuesday 8 April 2014

காகமானவள்

மஞ்சள் பூக்கள் மலர்த்திக்கொட்டும்
மரத்தடிகளைக்
கடக்கையிலெல்லாம்
இரட்டைக் காகங்களை
கண்டுவிடுகிறவள்

ஆட்காட்டிவிரலும் நடுவிரலும்
விரித்து வெற்றிக்காய்
புன்னகைப்பாள்
இரட்டைக்காகங்களை நோக்கி

விரல்களற்று இருப்பதுதான்
எத்தனைத் துயரம்
காகங்களுக்கெனச்
சொல்லிச் சிரிப்பாள்

அவள் தரப்போகும்
மகிழ்வின் சுபசகுனங்கள் குறித்த
காகங்களின் மனக்கிலேசங்களை
அவள் மதிப்பதில்லை
அவளுக்கு காகங்கள்
மட்டுமே போதும்

இரவின் நிழல்
காகங்களாய் உயிர்த்ததாய்
என்றோ எவரிடமோ
சொல்லியவள்
அவளிடம் தொலைபேசும்போது
காகங்களின் பின்னணியிசையை
நீங்களும் கேட்கலாம்

நாற்பத்தைந்து டிகிரீ கோணத்தில்
கழுத்துகளைத் திருப்பி
மெய்யான காகப்பார்வையுடன்
நீண்ட நேரமாய் காத்திருக்கின்றன
ஜோடி காகங்கள்
அவள் ஜன்னலில்

மஞ்சள்பூக்கிளையுரசும் பால்கனியின்
விளிம்பிலிருந்து
விரல்களை விரித்தபடி
முன் தின இரவு
அவள் விழுகையில்
ஒரு காகம் பறந்ததைப்போலவே
இருந்ததாய்
காவலாளி சொல்லிக்கொண்டிருந்தான்
அனைவரிடமும்

No comments:

Post a Comment