Wednesday 23 April 2014

இங்க்ரிட் ஜோன்கெர் : வலசை இதழ்


இங்க்ரிட் ஜோன்கெர் : இவர் தென்னாப்பிரிக்கக் பெண் கவிஞர். (1933 – 1965). வண்ண வேறுபாடுகளால் ஆப்பிரிக்காவில் அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த அவலங்களை உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் விதமாய் அபாரக் கவிதைகள் எழுதியவர். இவரது மனநலம் பாதிக்கப்பட்டத் தாய் இறந்ததும் தந்தையிடம் வளர்ந்தார். இவர்தம் கொள்கைகளாலும் எண்ணங்களாலும் தந்தையால்(வண்ண வேறுபாடுகள் ஆதரிப்பவர்) வெறுத்து ஒதுக்கப்பட்டார். ”கோடைக்குப் பின்”(AFTER THE SUMMER) எனும் இவரது முதல் நூலை இவர் எழுதுகையில் இவருக்கு பதின்மூன்று வயது! ஆனால் முதலில் வெளியாகியது, “தப்பித்தல்”(ESCAPE) எனும் தொகுப்புதான். இவரின் “புகையும் ஓக்கரும்”(SMOKE AND OCHRE) எனும் நூல் பெரும் புகழை இவருக்கு ஈட்டித் தந்தது. திருமணமாகி ஒரு பெண்குழந்தை பிறந்ததும், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்தார். அதன் பின்னர் இவருக்குக் இரண்டு காதல்கள் உருவாகின. அதன் மூலம் உருவானக் கரு வேண்டாமென இவர் கருச்சிதைவு செய்துகொண்டபோது ஆப்பிரிக்காவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளானார்(கருச்சிதைவு அப்போதைய ஆப்பிரிக்காவில் சட்டப்படி குற்றம்). இவைகளால் மனச்சிதைவுக்கு உள்ளானார் இங்க்ரிட். தன் தாய் இறுதிக்காலத்தில் இருந்த அதே மருத்துவமனையில் இவரும் சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர் அதிகக் கவிதைகள் இயற்றினார். பெரும் புகழும் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு கறுப்பின சிறுவன் அவன் தாயின் முன்னிலையிலேயே ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்வுற்ற இங்க்ரிட் ஆப்பிரிக்க மொழியில் எழுதிய கவிதைதான், “DIE KIND”. ஆப்பிரிக்கா முழுதும் பெரும் தாக்கத்தையும் அதிர்வையும் உண்டாக்கிய கவிதை இது. 1994ஆம் ஆண்டு, நெல்சன் மண்டேலா அவர்கள் முதல் ஆப்பிரிக்க பாராளுமன்ற கூட்டத்தொடர்தனை இந்தக் கவிதையைப் பாடித் தொடங்கி வைத்தார். இங்க்ரிட்டின் வாழ்வை சொல்லும் திரைப்படமாக “BLACK BUTTERFLIES” வெளியாகியுள்ளது. தன் வாழ்நாள் முழுதும் தந்தையால் வெறுக்கப்பட்டப் பெண்ணாகவே இவர் இருந்தார். இது இங்க்ரிட்டிற்கு பெரும் மனச் சோர்வைத் தந்தது. தன் வாழ்வில் தனிமையும் வெறுமையும் உணர்ந்த இங்க்ரிட் 19, ஜூலை, 1965யில் கேப் டவுன் கடலில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டார். இங்க்ரிட்டின் தற்கொலைப் பற்றியச் செய்தி கிடைக்கப் பெற்றதும் அவர்தம் தந்தை, “அவளை மீண்டும் கடலுக்குள் எறிந்து விடவேண்டும்!” எனக் குரூரமாக பதிலளித்தார். இங்க்ரிட்டின் அதி உன்னத எழுத்துத் திறனாலும், அவர்தம் வாழ்வின் அதி சோக முடிவாலும் ஆப்பிரிக்காவின் ”சில்வியா பிளாத்” என அழைக்கப்படுபவர்.

இங்க்ரிட் ஜோன்கெர்
---------------------------------------
முந்நீர்முனைத் தளும்பலின்
பால்யகால சுவாசங்களில்
உப்பின்சுவை படிந்திட்ட
நினைவு நாமொட்டுகள்

அடைகாத்து வெளியேகியதும்
மனதால் பிறழ்ந்த
இறப்பொன்றின் தொடர்வாய்
தகப்பனின் உறவு

குயிலின் நிணம்தோய்ந்த
பருவக்கூத்தின் பதின்களில்
கோடைக்காலத்தின் பின்
நரகம் விட்டு வெளியேற
காகிதங்கள் துணைபுரிந்ததும் நிதர்சனம்

மணப்பிரிவு உள்ளடக்கிய
ஒற்றைச் சூனியத்தின் மையப்புள்ளியென
பெண்மகவின் கருணைவருகை

குருதியிலும் வண்ணம்பிரிக்கும்
கூர் அலகுப் பிணந்தின்னியாகியவனும்
கருவறைக் களைந்து
உதிரமாயொழுகிய சிசுவும்
மனதுள் சிம்மாசனமிட்டனர்
ஏகநேர இருகாதலில்
எத்தனையோ சஞ்சல ஊற்றுகள்

முடிவின் முடிவாய்
தாய்ப்பறவை முகாமிட்டிருந்த
வால்கென்பெர்க் குடிலில்
தஞ்சமடைய விதி

புகழ்வரலாறெனத் தொடர்ந்த
புகையும் ஒக்கரும்
தெளிவூட்டும் படிமங்களாய்
தென்னாப்பிரிக்க மனங்களில்

தலைகவிழ்ந்தச் சூரியனின்
ஒளிக்கற்றை வழியல்களாய்
வரிகளெலாம் உடைப்பெடுத்து
திசையெங்கும் பயணித்தன

மென்தென்றல் பொழிந்த
பின்மாலை ஒன்றில்
மூளைக்குள் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திட்ட
தாய்மடி கிடந்த கறுப்பினச்சிறுவனுக்காய்
உலகெரிக்கத் துணிந்தனள்
சொற்வாட்களின் ஒலி கொட்டுமுழங்கிடவே

வரிகளின் வெளிச்சத்தில்
கருநிழலென உருவாகிறான் சிறுவன்
லங்கா, ந்யாங்கா, பிலிப்பி,
ஓர்லாந்தோ, ஷார்ப்வில் எனக்
காணக்கிடைக்கும் சாமானியனில்லை

சட்டங்களின் அதிகாரமெய்தி
சாளர இடைவெளிகளில் பிம்பமாகியும்
கரும் தாய்களின் இதய உள்ளறைகளில்
வாசம் செய்தவனாய் ஆனான்

ந்யாங்காவின் கதிர்களில் செழித்து
ஆப்பிரிக்க வீதிகளில் வீறுநடையிட்டு
உலகெலாம் அசுரப்பயணம் செய்தவன்
இவளை வந்தடைந்ததாய்
வரிகள் செய்தவள்தான்
அத்தனைப் பெரும் கனவிற்கான
திறவுகோலினை வடிவமைத்தவள்

வதனங்களை வரையறுத்திட
முன்னும் பின்னும் இருப்பவையாவும்
தன்முகமெனப் பிரகடனம் செய்து
கறுப்பு வண்ணத்துப்பூச்சியென
சபிக்கப்பட்ட நிலமெங்கும்
பறத்தல் தொழில்

வெகுபார நொடியொன்று
அவள் மீதேறி அழுத்தியவேளை
சிறகுகள் வெட்டியெறிந்திட்டு
முந்நங்கூர வளைகுடா
மணற்கரை அரித்துச் செல்லும்
வெண்ணிற நதியெனப் பாய்ந்தே
கழிமுகமில்லா கடல் கரைந்தாள்

மூழ்கிக்கிடக்கும் சங்குகளெல்லாம்
இனி அவள் வரிகள் ஒலிக்கும்
“முதல் மரணத்திற்குப்பின்
மற்றோர் மரணமில்லை!”

No comments:

Post a Comment