Wednesday 30 April 2014

கதிர் கரம்

துணிக்கடை
விளம்பரத்தட்டியின்
பின்னிருந்து எழுந்து
நகைக்கடை
விளம்பரத்தட்டியின்
பின் விழும் அது
எந்நாளும்

மிகச்சரியாய் ஒரு பறவையின்
அலகின் அருகில்
அது நகரும்போது
ஒருவன் புகைப்படமெடுக்கிறான்
மற்றொருவன்
கவண்கல் எறிகிறான்

நதியில் குளிக்கும்
அதன் கூர் மஞ்சள் முனைகளை
வெட்கியபடி வரைகிறாள்
சிறுமியொருத்தி

சகதியின் குளுமையில்
மெய்மறந்திருக்கும்
சினை நாய்களுக்காய்
அது
கருணையேதும்
கொள்வதில்லைதான்

வெள்ளரிப்பிஞ்சுகள்
விற்கும் முதியவளின்
தலை முக்காடினை
கண்டிப்பான காவல்காரன்
போலே தட்டிப் பார்த்ததும்
முன்னிரவில் வெட்டப்பட்ட
மகிழம்பூ மரத்தினை
ஒரு கணம்
வெறித்துவிட்டு விரைகிறது
அது

தானழிய
ஒரு மலையோ
ஒரு கடலோ
இல்லாத நிலங்களை
சபித்தபடியே
தன் இறுதி கரத்தினையும்
உள்ளிழுத்துக் கொள்கிறது
அது
எந்நாளும்

No comments:

Post a Comment