Friday 25 April 2014

வனமொன்றில்...

பாறைமீது இளைப்பாறும்
கடற்பறவைகளின்
காயங்களை
அலகால் குத்தி
குருதி மட்டுமே
சுவைக்கும்
சாம்பல் வண்ணச்
சிறுபறவையைக் கண்டு
சற்றே மிரண்டு
அலைகளை அனுப்பும்
செங்கடல்

------------------------------

மூங்கில் சருகுகளை
அத்தனைப் பெரிய உடலால்
கூட்டிச்
சிறுகுன்று செய்து
அதனுள்
பொதிந்திருந்த முட்டைகளுக்குக்
காவலிருக்கும்
ஆண் ராஜநாகங்களின்
இரவு விழிகளில்
நெளியும்
நாளைய சிசுக்கள்

-------------------------------

கரும்பாறைத் திட்டுகள் மீது
காட்டெருமைகள்
பீய்ச்சியடித்துச் சென்ற
பாலின் கட்டிகளை
வெட்டியெடுத்து
தாம் உண்டிருப்பதாய்
அவள் சொல்லும்போதெல்லாம்
கீறிய பாலாடைக்கட்டிபோல்
நெகிழ்கின்றன
அவள் கன்னச்சுருக்கங்கள்

--------------------------------

மினுங்கும் தோலுரித்து
இரவு புகும்
இந்த நாளை
சற்றே ஆயாசத்துடன்
கடந்து செல்கிறது
கடைசி பறவை

-----------------------------

No comments:

Post a Comment