Tuesday 8 April 2014

இரவுகள்


சலனமற்ற இரவுக்காய்
ஏங்கும்
மாநகர விளக்குக் கம்பங்களின்
மஞ்சளொளி
இரவையும் இருளையும்
மற்றுமொருமுறை
குழப்பிக்கொள்ள மாட்டீர்கள்தானே

-----------------------

மலைக்காட்டின் இருளில்
கண்கள் ஒளிர
வெறிக்கும் இரவின்
கொடும்பசி கண்டு
இலைகள் அதிரச் சிலிர்க்கும்
நெடுமரம்

-----------------------

புல்லாங்குழலின் இரவுகள்
மூங்கில் வனங்களில்
ஓடி ஒளிவதை
ரசித்தபடி
கடக்கும் காற்று

-------------------------
பிரபஞ்ச இருளில்
வழிதவறிய ஆதிக்கடவுளின்
இறுதி உயிர்ச்சொட்டாய்
மிதக்குமிந்த உலகை
முழுதாய்
போர்த்தவியலாத
கழிவிரக்கத்தில்
இந்த இரவு

No comments:

Post a Comment