Wednesday 23 April 2014

சந்தை

நிலவும் வண்ணத்துப்பூச்சியும்
இந்த வரிகளில்
மிதப்பதில்லை
அவள் உத்தரவிடுவதுமில்லை
கொஞ்சமாய் திறந்திருக்கும்
இந்தச் சாளரங்கள்
அனுமதிப்பது
காற்றை மட்டுமே
குழல் நுழைந்த காற்றில்லை
உயிர் துடிக்கும் காற்றுமில்லை
காற்று
அவ்வளவே
பிறந்த சிசுவொன்று
அன்று
வெளியெங்கும் அலைபாய்ந்து
உள்ளிழுத்ததே
அந்தக் காற்று

-------------------------------

அந்த அறைமுழுதும்
கரும்பச்சைக் காட்டை
அடைத்து வைத்திருந்தனர்
பாதங்களில் கறிவேப்பிலை
மணத்துடன்
உணவருந்துகிறான்
கடைச்சிறுவன்

--------------------------------

ரயிலடி காய்கறிச் சந்தையில்
இன்று இரவும்
அவளை நீங்கள்
கேட்க நேரலாம்
ஊமையானவளின்
பலத்த குரலில்
வாழைக்காய்கள்
காய்ப்பதையும்

-------------------------------

வெடித்தத் தக்காளியாய்
சிவந்து முற்றிய
இதழோரப் புற்றுடன்
காய்கறிப்பாட்டியின்
புகையிலைச் சிரிப்பு

மிரண்ட குழந்தை
ஆங்கிலத்தில்
தக்காளியை
முணுமுணுக்கிறது

------------------------------

No comments:

Post a Comment