Thursday 28 March 2013

வியர்வை தோய்ந்த வற்றலின் மாடிகள்

கைப்பிடிச் சுவரோரம் 
தேங்கும் மழைநீர் 
இளம் நா துருத்திப் 
பருகும் புது வெயில் 

உலர்த்திய துணிகள்
சேகரித்த அந்திப்பொழுது
இருள்மூலையில் கண்ட
வெளிர் உருவம்

மீந்த சாதம்
பச்சைமிளகாயிட்டு அரைத்து
இட்ட வற்றலில்
உப்பு சேர்த்தத்
துளி வியர்வை

கிளையோடும்
அணிலோடும்
மஞ்சள் பூக்கள்
உதிர்த்து உரசும்
தெருவோர மரம் 


அதிகாலை நடைகளில்
ஆதுரமாய் பாதம்
பற்றும் குளிர்மை

தனக்கான இத்தனை
நிகழ்வுகளோடு
குழந்தையொன்றை
சுமக்கும் யானைபோல்
எனை ஏற்றி இறக்கும்
இந்த மொட்டைமாடி

No comments:

Post a Comment