Thursday 28 March 2013

சுவை மாறிய கனிகளும் அவற்றின் கரிப்பும்

தேடல்கள் முடித்திட்ட 
தடித்த என் வேர்களின் மீது 
வந்தமர்கிறான் 
கண்ணீருடன்

புறக்கணிப்போ
தோல்வியோ
துரோகமோ
இயலாமையோ
தன்னிரக்கமோ
ஏளனப்பட்ட அன்போ
மீட்க முடியா மானமோ
இங்கிவனை அமர்த்தியிருக்கலாம்

என் இலைகளின் ஸ்பரிசம்
என் மலர்களின் வாசம்
என் கிளைகளின் நடனம்
என் முழுமையின் நிழல்
பரிசளிக்கிறேன்

என் இருப்பின்
உணர்வே அற்றவனாய் விரைபவனின்
கண்ணீர் தடமும் வெப்பமும் என்
நாளைய கனிகளில் சேகரிக்கிறேன்

சுவைமாறி கரிக்கும் கனிகள்
இனி எனதென முடிவாகும்
அவனும் அடையாளம்
காணும் வகையில்

No comments:

Post a Comment