Wednesday 25 June 2014

கவித்துளிகள்

மெழுகுத்துளிகள்
உருகிவிழும் ஓசையில்
திடுக்கிட்டு
கவனம் கலைகிறார்
பிதாமகன்
தேவாலய உச்சியில்
இருந்தவரின்
விரிந்த கரங்களில் இருந்து
மேம்பால வாகனங்களின்
முகப்பொளிகள்
கருணை போல்
வடிந்துகொண்டிருந்தது

--------------------------------------------

முதிர்ந்த கனிபோல் இருந்த 
வயிற்றினுள் 
அசைந்த சிசுவை 
வாரியணைத்துவிட்டு
மீண்டும் கருவறைக்குள் 
பத்திரம் செய்வதாய்
சிறு பாசாங்கு 
செய்கிறாள் தாய்

சிறுமியின் சிமிழ்விழிகளுக்குள்
அடங்க மறுத்துத்
தளும்புகிறது
அத்தனைப்
பெரிய அதிசயம்


------------------------------------------
சருகுகளைக் காற்று
கொண்டுசென்று
விட்டிருந்தது
நீண்ட கால மவுனத்தில்
இருந்து
விடுபட்டதைப்போல்
மரம் துளிர்க்கத்
தொடங்கியதும்
கிளைகளில் பதிந்திருந்த
தன் தடங்கள்
காணாது
பூனை திரும்பி
நடக்கத் தொடங்கியது


----------------------------------------------



No comments:

Post a Comment