Wednesday 25 June 2014

மாயவரத்து அத்தையுமானவள்

புகைப்படத்திலும் 
பார்த்தேயிராத
மாயவரத்து அத்தையை
அச்சுவார்த்தாற் போல்
நான் இருப்பதாய்
ஊருக்குச் செல்லும்போதெல்லாம்
சொல்கிறாள்
நானம்மா

சுள்ளிகள் எரித்து
நானம்மா சமைக்கும்
அன்னத்தை
சிறு உருண்டைகளாக்கும்போது
விடுபட்டு நிற்கும்
என் ஆட்காட்டி விரலை
சில நொடிகள்
உற்று நோக்கியவள்
ஏதோ சொல்ல
வாயெடுக்கிறாள்

பின்னர்
கலங்கிய விழிகளுடன்
எழுந்து சென்று விடுகிறாள்
பாடுகள் கடந்து
தேடிக்கண்டடைந்த
நாளின் இறுதி இரையைத்
தவறவிட்டிருந்த
முதிய பறவையைப் போலே

1 comment:

  1. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete