Thursday 26 June 2014

வெள்ளை ஜானி

வெள்ளை ஜானி
இறந்தது
மின்சாரமற்ற
மழை தூவியிருந்த
ஒரு அதிகாலையில்தான்

அன்றைய
பள்ளித் தேர்வை
அழுதுகொண்டே எழுதியபோது
மட்டும்
ஜெய்விஜய்
என் விடைத்தாள்களைக்
கேட்கவில்லை

வெகுநாட்களாய்
என் குளியலறையில்
கேட்டுக் கொண்டிருந்த
ஜானியின் மெல்லிய
இறுதி முனகலை
நீரின் சலசலப்புடன்
கரைக்கக் கற்றிருந்தேன்

அகோபிலம் கோவிலின்
இடப்புறமிருந்த
கட்டணக் கழிவறை
வாசலில்
வெள்ளை ஜானியை
யாரோ கட்டிப்போட்டிருந்தனர்

”ஜானி”
என விளிக்கிறேன்
”அது சின்னா”
என்கிறார் புன்னகையுடன்
கழிவறையைப் பராமரிக்கும்
பெரியவர்

நான் அழைத்த கணமே
சின்னா
வெள்ளை ஜானியாய்
மாறிவிட்டிருந்ததை
அவர்
ஏன் அறிந்திருக்கவில்லை

No comments:

Post a Comment