Wednesday 25 June 2014

அவள் கதவுகள்

அனைத்துப் பயணங்களிலும்
கதவுகளை
அவள் துணைக்கழைத்துச்
செல்கிறாள்

குளக்கரைக் குளியல்களில்
மேனியெங்கும்
இமைகளின் படபடப்புகள்
குறுந்தீ போல் 
படர்ந்து நகர்வதை
உணர்பவள் அவள்
எனக்
கதவுகளும் உணர்ந்தே
இருக்கின்றன

வாட்கூர்மையோடு
வெளிச்சக்கீற்றுகள் புகும்
கதவுகளின் இடுக்குகள்
வழியேதான்
அவள் யுத்தங்களையும்
பலிகளையும்
ரசிக்கிறாள்
அல்லது
புரிகிறாள்

சராசரி கதவுகள்
சரிப்படாதபோது
கோட்டைக் கதவுகளை
அவளே பெயர்க்கிறாள்
அது
ஒரு முகில் போல்
அவள் தலை மீது
தவழ்ந்து அவளைப்
பின்தொடர்கிறது

கதவுகளின்
பின்னணிகளை அவள்
உணர்ந்தவள்
எல்லா கதவுகளின்
பின்னிருப்பதுவும்
அவளே என
அவளறிவதெல்லாம்
துல்லியங்களின்
இறுதி வாக்குகளாய்
இருந்துவிடுகின்றன

ஒரு கதவின் வழியே
மற்றொரு கதவைச்
சென்றடையும்போது
அவள்
ஒரு கிரகத்தினின்று
மற்றொன்றுக்கு
நகர்வதாய்
கதவுகள் பேசிக்கொண்டன

எனினும்
கதவுகள்
அவளைக்
கைவிடுவதே இல்லை
தேவனல்லாத
பொழுதுகளிலும்

No comments:

Post a Comment