Wednesday 25 June 2014

சிற்பக்கண்களின் நித்திரை

பிரம்மாண்ட கண்ணாடிக்
கட்டிடங்களில்
முகம் பார்த்து
நகரும் வெயில்
குல்மொஹர் மரம்
உடலெல்லாம்
இலையாகி நகைக்கிறது

--------------------------------------------

அத்தனைக் குளிரான
குகைக்குள்
நுழைவதற்காய்
காத்துக் கொண்டிருந்தது
வெயில்
குகைச்சுவர்களில் எதிரொலித்தக் 
காவலாளியின்
புத்தம் சரணம் கச்சாமி
பிச்சையிடப்பட்ட 
நாணயம் போல்
வந்து விழுந்தது
வெளியே

------------------------------------------

இருபத்தியாறாம் எண் குகை
அவர்களால்
முடிக்கப்படாது
இருந்தது
ஒரு அவிழ்க்கப்படாத
புதிர் போலும்தான்

-------------------------------------------
கற்படுக்கைகளின் சயனம்
செதுக்கப்பட்டிருந்தது
முத்திரையொன்றை
புத்தரின் விரல்களில்
சோர்வுடன் செதுக்கியவன்
நைச்சியமாய்
சிற்ப விழிகளுக்குள்
தன் நித்திரையைப்
புகுத்தியிருந்தான்

----------------------------------------------

No comments:

Post a Comment