Wednesday 25 June 2014

எல்லோரா சிற்பத்தடங்கள்

புத்தரின் 
நெஞ்சுக்கூட்டு எலும்புகளைக்
குறிக்குமாறு அமைந்திருந்தது
குகைக்கூரை
தூண்களில் மோதித் 
திரும்பிக் கொண்டிருந்தது
குகைக்காவலாளியின்
சுருட்டுப் புகை

----------------------------------------------------

முப்பரிமாணச் சித்திரங்களில்
மெய்மறந்திருந்த
அயல்தேசக்காரனை
ஒரு குகைப்பறவையென
எண்ணித்தான்
சிறைபிடித்தாள்
புகைப்படக்கருவிக்குள்

-----------------------------------------------------
சிதிலமாகிக் கிடந்த
சிற்பங்களிடையே
கரங்களில் முழு வீணையுடன்
முலைகள் தகர்ந்துகிடந்த
கலைவாணியின்
அருகில்தான்
மிக நீண்ட வரிசை
புகைப்படமெடுத்துக் கொள்ள

--------------------------------------------------
இருளுக்குள் ஒளிந்திருந்த
லிங்கமொன்றை
ஒளிப்பாய்ச்சி புகைப்படமெடுப்பவன்
எந்த யுகத்தின்
நித்திரையைக்
கலைத்துக் கொண்டிருந்தான்

-------------------------------------------------


பெண்சிற்பத்தின் இடைபற்றிக்
கிடந்தது ஆண்சிற்பம்
விரலழுத்திய தடம்
அத்தனைத் தத்ரூபமாய்
பதிந்திருந்ததைக் கண்டதும்
ஐயப்படுகிறேன்
இதற்குப்பிறகும்
அவர்களைச்
சிற்பங்கள் எனத்தான்
குறிப்பிட வேண்டுமா
நான்?

------------------------------------------------

No comments:

Post a Comment