Wednesday 25 June 2014

இறைச்சிக்கடை

உலர்ந்த குருதியுடன்
தனியாய் விடப்பட்டிருக்கிறது
இறைச்சி வெட்டும்
அடிமரத்துண்டு

சாவகாசமாய் 
வந்தமர்கிறது
மஞ்சள் படர்வின் இடையே
கருநீல விழிளுடைய
அந்தப் பறவை

-----------------------------------------

நெகிழித்தாள் சுற்றியிருந்த
கரமுடன்
கடைவாசலிலேயே
அமர்ந்திருந்தார்
இறைச்சிக்கடை சிப்பந்தி

தாளினுள்
சொட்டும் இரத்தத்தின் ஓசை
மெல்லப் படியேறி
கடைக்குள் செல்வதை
பார்த்துக் கொண்டிருந்தார்

--------------------------------------
அந்த இயந்திரத்தில்
இருந்து
சிதைந்த நினைவுச்சின்னம் போல
பறவையை அவர்
எடுக்கும்போதும்
அதன் கால்கள்
துடிப்பதை நான் பார்க்கிறேன்

சிறகுகள் குறித்து எனக்கு
அக்கணம் ஏதும்
எண்ணமெழாமல் இருந்தது
மிகுந்த ஆசுவாசமாய்
இருக்கிறது


----------------------------------------------
எவரும் கவனியாது
காய்கறிச் சந்தையில்
முட்டைகோசுகள் மீது
புரோக்கலி ஒன்றை
அடுக்கிவிட்டு நகர்கிறாள்
சிறுமி

மலைத்தொடர் மீது
தனித்திருக்கும் மரம்போல்
காத்திருக்கிறது அது
அடுத்த சிறுமிக்காய்


--------------------------------------------------




No comments:

Post a Comment