Wednesday 25 June 2014

மழை நிற்க இன்னும் இன்னும் நேரமிருக்கிறது

இந்த மழைநாளில் மட்டும்
அந்தக் குயில் எங்கிருந்தோ
வெகுநேரம் அலறுகிறது
மேலும் பச்சையுடன்
சாலையோர மரங்கள்
தாழ்ந்து வருகின்றன
கட்டிடங்களின் பின்னிருந்து
கன்னங்கள் உப்பியக்
கருப்புக்குழந்தைபோல்
மேகங்கள் எட்டிப்பார்க்கின்றன
நீர்த்துளி ஆரமணிந்து
மாங்கனிகள் வைக்கோல்மீது
ஓய்வெடுக்கின்றன
இரண்டாம்நாள் விடாயென
கழிவுநீர் பெருக்கெடுக்கிறது
உன்னதமான துரோகம்
கச்சிதமாய் நிறைவேறுகிறது
சமீபத்தில் தாயை இழந்த
மழலையொன்று
இடியோசை கேட்டு
கரடிபொம்மையை இறுக்க
அணைக்கிறது
பொம்மையும் குழந்தையை
அணைத்துக் கொள்கிறது

மழை நிற்க
இன்னும்
இன்னும்
நேரமிருக்கிறது

No comments:

Post a Comment