Wednesday 26 February 2014

மலர்தலின் கணம்

பவளப்பாறையிடுக்கில்
புகுந்து 
வெளியேறும் வழி மறந்த
சிறு மீனாய்
தணியா வேட்கையொன்று
உள்ளெல்லாம்
நிரம்பித் தவிக்க
கடைசிச் சொட்டிலும்
இனித்துக் கிடந்த
பனிக்குழைவானச்
சூழல் நோக்கி
நம்மை
அழைத்துச் சென்றவர்
எவரென
இருவரும் அறியோம்தானே


---------------------------------------------------------

இரு உயரம் சமன் செய்ய
மெல்ல இடை பற்றி
லேசாய் உயர்த்தி
தீஞ்சுவை ஈரங்கள்
இடம்மாறிட
இடப்படும் முத்தங்களின்
இறுதியில்
முளைக்கும் சிறகுகள்
வெகுவாய் கனக்கின்றன
இரு பறவைகளுக்கும்


----------------------------------------------------------
நெகிழ்ந்து விலகும்
இடுப்புக்கச்சைபோல்
அகாலவேளை
அவிழும் மலர்களில்
மட்டும் ஏன்
இத்தனைத் தேன்
வழக்கத்திற்கு மாறாய் என
வியக்கும் வண்டுகள்

காற்றறியும் எல்லாம்


--------------------------------------------------
மலருக்கும் காற்றுக்கும்
இடையே
தத்தளித்தபடி
மலர்தலின் கணம்

---------------------------------------------------





No comments:

Post a Comment