Wednesday 26 February 2014

ஒரே மழையைதான் பார்க்கிறோமா?

பக்கத்து மேஜையில்
எச்சில் ஒழுக
பருக்கைகள் சிந்தி
உணவருந்தும்
மனநலம் பிறழ்ந்த சிறுவன்
உணவக ஜன்னல்வழி
மழை பார்க்கிறான்

அவனும் நானும்
ஒரே மழையைதான்
பார்க்கிறோமா

---------------------------------------------------

வலதுபக்கம்
சொர்ண கோபுர விதானம்
இடதுபக்கம்
மங்கிய இரண்டாம் நாள் நிலவு

இரண்டையும்
நேர்க்கோட்டில் இணைக்க
அத்தனை வேகமாய்
பாய்கிறது
அந்தச் சிறுபறவை

-----------------------------

என்னோடு மலையேறி
வந்துவிடேன் எனக்கூறி
விரல்பிடித்து
அழைத்துச்செல்லத் தூண்டுகிறது
பயணிகளற்று நிற்கும்
அந்தத் தொடர்வண்டி

-----------------------------

லேசாய் பதறி
பாதங்களை உயர்த்திக் கொண்டேன்
கருமையின் முந்தைய
நிறத்தில் கந்தல்துணி
வைத்திருந்தவன்
கடலைத்தொலிகளை
அகற்றுகிறான்
தடுப்பவளை நோக்கி
அவன் வீசிய பார்வையில்
யுகங்களின் ஏளனம்
ஊனமென்பது உண்மையில்
என்னவென
மற்றொருமுறை கேள்வியொன்று
எழுகிறது உட்சுவர்களில்
சில்லறைகள் பெற்று
தவழ்ந்து நகர்பவனிடம்
எப்போது சொல்வேன்
நான் தொலிநீக்கிய கடலைகள்
உண்பவள் இல்லையென

------------------------------

வெடவெடக்கும் குளிரடக்க
புகையிலை அதக்கிய வாயோடு
நீலச் சீருடையும்
பச்சை வண்டியுமாய்
மாநகரத் துப்புரவாளர்கள்
கடும் வீச்சத்தினூடே
சகதியாய்
குவிந்த குப்பைகளிடை
கடமையாற்றும் காலை
மட்டும்
மழை வேறு முகம்
காட்டுகிறது எனக்கும்
மழைப்பிரியர்களான
உங்களுக்கும்

----------------------------

கட்டி முடிக்கப்படாத
வீட்டின் ஜன்னலிலிருந்து
மழை பார்க்கும் பூனையை
மழையும் பார்த்துக் கொண்டிருந்தது
இருவரையும் பார்க்கும்
என்னை
அந்த வீடும் பார்த்துக் கொண்டிருந்தது
நிறைய மழையும்
கொஞ்சம் பூனையும்
சுமந்தபடி

----------------------------

பாதாளங்கள் விரிந்தபடியே
தொடர்கின்றன
கவிழ்ந்து விழ
அவர்கள் தரும்
நேரமும் மிகக்குறைவாகவே
உள்ளது இக்காலங்களில்

படிக்கட்டுகள்வழி
இறங்க விரும்புபவளை
பின்னிருந்து தள்ளிவிட
எப்போதும் காத்திருக்கும்
அரூப கரங்களை
என் செய்வதென அறியாதவள்
முன்னர் விழுந்து எழுந்த
பாதாளங்களிடம்
ஆலோசிக்கிறாள்
கரங்கள் துண்டிப்பது
எவ்வாறென

அதே புன்னகையுடன்

------------------------------

No comments:

Post a Comment