Wednesday 26 February 2014

ஊழிப்பெருவலி எங்கும் உள

வழியும் குருதியைக்
கண்டதும் மூர்ச்சையாகுபவள்
முற்றிலும் மாறியிருக்கிறாள்

குடல்கிழிந்து
நெடுஞ்சாலையெங்கும்
சதைத்துணுக்குகளான
நாய்களை
ஒவ்வொரு பயணத்திலும்
அனிச்சையாய் தேடுகிறாள்
கார்ட்டூன் பூனைகளிடம்
இறுதிவரை பிடிபடா எலிகள்
அலுப்பூட்டுகின்றன
அவற்றின் குரல்வளைகள்
கிழிபடுவதற்காய் மட்டுமே
என நம்புகிறாள்

அகாலவேளை
தொலைபேசி அழைப்புகளுக்காய்
மரணம்போல் காத்திருக்கிறாள்
இறுகும் கயிறுகளின்
தடங்கள் தேடுகிறாள்
குறைந்தபட்சம்
ஒரு முயல்வேனும்
தேவைப்படுகிறது
இன்றைய அவளுக்கு

உயரங்களில் நிற்கையில்
பிளந்த கபாலங்களையும்
ராட்சத சக்கரங்களின்
அருகண்மையில்
சிதைந்த கால்களையும்
நினைவு கொள்கிறாள்

பெரிய கற்பனைகளின்
பெரிய வலிகள்
வேண்டியிருக்கிறாள்

மகவின் காயத்தில்
களிம்பிடும்போது
அழுத்தித் தேய்க்கிறாள்
வலிபிதுங்கி
வெடிக்கும்போழ்தும்
சன்னமாய் முனகுகிறாள்

ஊழிப்பெருவலி
எங்கும் உள

No comments:

Post a Comment