Wednesday 26 February 2014

இல்ல வனம்

எந்நேரமும் உதிர்ந்துவிடும்
அபாயத்துடன் 
கம்பியிலாடும் நீர்த்துளியாய்
யோசித்து யோசித்து
மலையேறிக் கொண்டிருந்தவளை
கைநீட்டித் தடுத்தவர்
வனம் எங்கிருந்து துவங்குவதாய்
வினவுகிறார்

எந்த அறிவிப்புப்பலகைகளையும்
நம்புபவர் இல்லை போலும்
இவளைப் போலவே

வனத்தின் முடிவு
எங்கிருந்து தொடங்கும்
என்பதை மட்டுமே
அறிந்தவள் அவளென்பதை
எந்த வனமும் மறுப்பதில்லைதான்

தம் இல்லத்திலிருந்தே
தன் வனம் தொடங்கிவிட்டதாய்
பதில் சொன்னவளைக் கண்டு
அவர் விழிகள் ஏன்
அத்தனை படபடத்தன
மலரிலிருந்து வழி தவறிய
ஒரு தேன்சிட்டு போல

தொலைந்து போனவர்கள்
பட்டியலில் மேலும்
இரு பெயர்கள் சேர்வதற்கான
சாத்தியங்கள் இருந்ததை
இருவருமே உணர்ந்தனர்
ஆம்
தொலைந்தது பெயர்கள்
மட்டுமே என்பதையும்
இருவரும் அறிவர்

No comments:

Post a Comment