Wednesday 26 February 2014

முதலைக் கனல்

முதல் கல்லறையில் தொடங்கி
மிகச்சரியாய் ஏழாவதை
முற்றிலும் மறைத்திருந்தது
காலைப்பனி
திரைவிலக்கி உயிர்த்து
வந்தவரைப்போல்
கடந்துச் செல்கிறது
திடீர்ப்பறவையொன்று

----------------------------------------------------------

அத்தனை உயரக் கோட்டை
மதிற்சுவர் நோக்கி
தவம் கிடந்தன
அகழியில் இனப்பெருக்கம்
துவக்கியிருந்த முதலைகள்
வெண்கலத் தட்டு நிறைக்க
கங்குகள் அள்ளியிட்ட
பச்சைநரம்போடும் கரங்களுடைய 
சேவகி படுக்கைவிரிப்புகளின் கீழ்
தீயைப் பத்திரம் செய்கிறாள்
தூரத்தில் முழங்கும்
போர்முரசுகள்
அலையலையாய் படர்ந்து
அரசியின் மேடிட்ட வயிற்றினில்
மேலேறுகிறது
இடமா வலமா
எந்தப் பக்க மார்பில்
நாகத்தை அணிந்துகொள்வதென
அவளுக்குக் குழப்பமேதுமில்லை
உயிரற்ற உடலையும்
கிட்டங்கியில் கிடத்தி
பின்னிப் பிணையப்போகும்
பாம்புகள் குறித்த அச்சத்தில்
சிசு லேசாய் புரளும்போதெலாம்
மட்டும்
சாம்பல் பூக்கிறது நெருப்பு
முதலையின் கண்கள்
போலவே


------------------------------------------------------------

No comments:

Post a Comment