Wednesday 26 February 2014

அவள் அறையெங்கும் அவன் வெளிச்சம்

பெருந்தெய்வங்கள் ஆற்றும்
தவம் போல்
நிகழ்ந்து கொண்டிருந்தது
அது

காட்டு வெள்ளத்தில்
புரண்டு வந்து கரை சேர்ந்த
பூக்குவியலின் மேல்
கண்டேன் அவர்களை

ஒலிகளனைத்தும்
ஸ்வரங்களாகி மீண்டன
குவியலும் அசைந்தபடிதான்
இருந்தது

கனன்று வீசிய மணத்தில்
வனம் மதம் கொண்டது
மிரண்டு பதுங்கிய
விலங்குகளின்
மயிர் கூச்செரிப்புகளில்
சுருண்டு கொண்டது காலம்

கந்தர்வர்களின் காதல்
தாளாது
அழுந்தி எழுகிறது
நிலமும் நிலம் சார்ந்த அனைத்தும்

சீற்றங்கள் பெருகியதும்
ஈரங்களின் வெம்மை
கூடுகிறது காற்றிலும்

இருள் போல்
கவிந்துவிட்ட
மோனம் கனத்து
அவ்விடம் அகல
முற்படும் கணம்
ஒளி வெள்ளம்

அவள் அறையெங்கும்
அவன் வெளிச்சம்

No comments:

Post a Comment