Friday 19 July 2013

மோன சஞ்சாரம்




சொற்களற்ற வெளி
மோன சஞ்சாரம்
களி பேருவுவகை 
தன்னுதிர ஓட்டம்
தானுணறும்
தன்னிகரில்லாத்
தனியுலகம்
இரவுக்கப்பால்
விரி விசும்பெலாம்
இருண்மை பூசிய
அடர் வாழ் தடம்
கொஞ்சம் நெகிழ்வு
மீதியெலாம்
கொஞ்சும் தனிமை
பாழ் வீதி முழுக்க
பால் வீதி மணம்
இயற்கை எய்திட
எங்கும் பேராவல்
வகைக்கொன்றாய்
உயிர்கள் சுமந்த
பெருங்கலம்
தூரத்தே இரையும்
பிரளய ஊழ்
சிறு பிளவு
குளம்புகளின் கீழ்

நிராகரிப்பின் கரிப்புத்துளிகள்


நிராகரிப்பின் கரிப்புத்துளிகள் 
--------------------------------------

அத்தனைக் கோரமாய் 
நெளிகிறது 
உனதிந்த உதாசீனம்

அதற்கான 
ஒற்றைக் காரணமாய் 
அது மட்டும் 
இருந்திடவே கூடாதென 
அரற்றி ஓலமிடும் 
இதனை நோக்கி 
அதோ உன் வருகை

விரல்பற்றி வருகிறது
அதே
ஒற்றைக் காரணம்
அத்தனைக் கோரமாய்
நெளிந்தபடி

-----------------------------------------

அன்றே அந்த
அழைப்பை
நீ நிராகரித்திருக்க
வேண்டும்
இன்று நிராகரிக்க
எனைத் தேர்வு
செய்வது
உன் முட்டாள்தனமேயன்றி
வேறேதும் இதில்
விசேஷ செய்தியில்லை

------------------------------------------

உண்மைதான்
வெற்றுக்கூடுகளும்
வசீகரமானவைதான்
ஆனால்
கூடுடைத்துதானதை
அறிய வேண்டுமெனில்
அதற்கு
கூடுகள் போதுமே
பொக்கிஷங்கள் எதற்கு

--------------------------------------------
விழிநிறைய
உயிர்தேக்கி
யாசித்து நிற்குமதை
நோக்கி நீளும்
அந்த விரலிடுக்கில்தான்
எத்தனை அழகான
வைர ஊசி

--------------------------------------------

எது குறித்தும்
பிரஸ்தாபிக்க
உத்தேசமில்லைதான்
ஆனால்
அங்கும்
இதுவே
இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
குறித்து
முன்னரே
நிரூபித்தாயிற்று
இடைவெட்டாய்
விழுந்த
அந்த
ஒற்றைச்சொல் மூலம்

----------------------------------------

மிதந்த சருகின்
நிழல்பட்டு
கறுத்துப்போன
நதியின்
தன்மையிது
சருகோடு நிழலும்
தெளிநதி மூழ்கி
சாபல்யம் பெறும்
காலமுமிதுவே

-------------------------------------------

Tuesday 16 July 2013

குறுந்துளிகள்


குறுந்துளிகள் 
--------------------
தாய்ப்பறவையின்
நிழலெனப் படர்ந்து
நகர்கிறது மழையிரவு
அலகு சிக்கிய புழுவென
நெளியும் பெருங்காமம்
---------------------------------
கண்கள் மூடிய
கரடிபொம்மையின்
இரவெங்கும் 
வேரல் வனச் சருகுப் பெயல்
---------------------------------
ஒற்றைச் சுடரின்
நிழல் குறித்து
ஆழ்சிந்தனையில்
கனிந்த முகம்

அத்தனைக் கைகளும்
கொண்ட ஆயுதங்களை
கீழிறக்கும்வேளை
தொங்கும் நாவும்
உள்ளிழுத்துக்கொள்ள
அம்சம் அம்சம்
எவ்வளவு
அழகு அவள்
---------------------------------
குறுகிக் குறுகி
நீளும் குகையொன்று
சேர்வராயன் பின்
இவனிருப்பது
குகையின் முடிவா
வாயிலா
பதிலற்ற வெளியெங்கும்
குகை குடையுமோசை
----------------------------------

பார்வைகளின் தீட்சண்யம்


பார்வைகளின் தீட்சண்யம் 
-----------------------------------

பாங்கு ஒலியோடு
துவங்கும்
அந்திப்பொழுதை
இரவின் வாயில்
சேர்ப்பிக்கும்
நிறையிசையாய்
பொழிகிறது
பெருமழை

-----------------------------------

அவர்கள் தொலைத்த
எதுவும் இங்கில்லை
அவற்றின் சாயல்களும்
இங்கில்லை
மனமகழ்ந்து என்னதான்
தேடலோ அறியேனில்லை
இதுவும் என்றோ 
எங்கோ
எவராலோ
தொலைக்கப் பட்டதுதான்
இருப்பினும்
அவர்கள் தொலைத்ததாய்
அர்த்தம் செய்திட்ட
எதுவும் இங்கில்லைதான்

----------------------------------------------
இன்றோடு நிறுத்தி விடலாம்
என்பவர்களின்
அந்த இன்றை நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தது
ஏனைய நாளைகள்

------------------------------------------------
கீரைக்கட்டினுள்
பொதிந்து வந்த
பச்சைப் புழுவின்
அடுத்தடுத்த காலைகள்
எத்தனைச் சூரியன்
கொண்டவைகளாய்
இருக்குமென்ற கேள்வி
முடியுமுன்னே
குக்கர் விசிலடித்துவிட்டது
---------------------------------------
தயங்கித் தயங்கி
மிதந்து வருகின்றன
முனைகளில்
கூர்மை மின்னிடும்
சொற்கள் 
உடனடி மரணத்திற்காய் 
எதை தேர்ந்தெடுப்பது என
குழம்பித் தவிக்கும்
பெருவெளிப்பறவை
------------------------------------------------
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
அரசியல் பிழைத்தோருக்கு
அறமே கூற்றாகும்
உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்துவர்
மாணவர்க்குக் கற்பித்தபின்
இழையோடும்
ஒற்றைப் புன்னகையில்
எத்தனைதான் மறைப்பது

இரவுகள் ஆன அவள்

இரவுகள் ஆன அவள் 
------------------------------

கருவண்ணக் கண்ணாடி வளைகள்
அணிவதில் அதீத விருப்பம்
வளைகளின் இடையில்
சப்தமிடுவது
இரவுகளாய் இருந்திடின்
நொறுங்குதல் குறித்தும்
கவலையேதுமில்லை
-----------------------------------------------------

மழையிரவு
கிளரும் வாசங்களில்
எதையும்
பாகுபடுத்த இயலுவதில்லை
பொல்லாக்காமம் மட்டும் 
நாசி நிரப்பி
புன்னகைத்துச் செல்கிறது
மழைத்துளி வசமாய்
-------------------------------------------------------
வனங்களுக்கான
பெருமழை காணக்
கிடைத்தது
நனைதலுக்கான பெருவனம்
எங்கேனும்
உறங்கிக்கொண்டிருக்கலாம்
எழுப்ப வேண்டாம்
தண்மழை வழியறியும்
-------------------------------------------------------

ஆம்
வேறுபாடு உண்டுதான்
இலைநுனி தேங்கி
நிர்மால்யமாய் வீழும்
ஒற்றைத்துளிக்கும்
குடைக்கம்பி முனை
இறுகித் தவிக்கும்
அந்தத் துளிக்கும்
வேறுபாடு உண்டுதான்
மழையே சொன்னது
--------------------------------------------------------

கிறங்கித் தவிக்கும்
மாநகரத் தொட்டிச்செடி
சர்வ வல்லமையோடு
இறங்கிப் பொழியும்
வனமழை
--------------------------------------------------------

வலியுணரும் வளி




வலியுணரும் வளி
--------------------------------

அடர்பிசினாய்
உடலெங்கும் மேய்ந்து
சீழொழிகி வீச்சமெடுக்கும்
அந்தப் பார்வை பிரித்தெடுக்க
அலட்சியப் புன்னகையொன்று
தொட்டுத் தடவி
மெல்ல மெல்ல
மேனி மறந்து
நடந்துலாவும் இதுவானது
நாளொரு பொழுதில்
வற்றித் தொய்ந்துபோகும்
வளிநிறை வெற்றுக்கூடென
உணர வைக்கும்
அவர்களும்தான்
ஞானகுரு எமக்கு

வேறோர் முறையில்

மழையிரவின் பிடியில்


மழையிரவின் பிடியில் 
-------------------------------

மெய்யெழுத்துகளின்
மேலிட்டப் புள்ளிகளாய்
மெய்களின்
மேல்விழும் துளிகள்
நிலமெங்கும் கவிபுனைந்து 
வழிந்தோடும் உயிரோவியம்
நீர்மை படர்ந்தபடி

-----------------------------------------

உள்ளோடிய
ஒற்றை மழைத்துளி
தன்வனம் புகுந்ததாய்
எங்கோ ஒளிந்தது
நாளைய துளிர்ப்பில்
கண்டுணர்ந்திடும்
எங்கோ பூத்திடும்
காட்டுப்பூவும்
----------------------------------------------------
திடீர் மழை
உடலோடு ஒட்டிய
பருத்தியாடை
அறைபுகுந்ததும்
பிய்த்தெறிய பிய்த்தெறிய 
முளைத்தபடி இருக்கும் 
மேலெங்கும் படிந்த 
வயதுவரம்பில்லா
அழுக்குப்பார்வைகள்

---------------------------------------------

சதுப்புநிலக் காட்டின்
ஈரவெப்பம் கொண்டு
பெருநகரம்
பெருமூச்சுடன்
குழைந்து நெளிகிறது
வரமான மழையிரவில்
-----------------------------------------------------------

நெய்தல்நிலம் புகுதல்



நீண்டு கொண்டே செல்லும்
கால வாகனத் தடத்தின்
இடையிடைத் துளிர்த்து
முகிழ்த்து மணம் வீசும்
நினைவெச்சங்களின்
குறுங்காடு கடந்து
நெய்தல் நிலம் புகுந்து
ஓடி மறைந்த
ஒற்றை வரையாடினைத்
தேடித் தொலையவும்
கொஞ்சம் காலம்
தேவையாய்தான் இருக்கிறது
கூடுதலாய்

மாற்றம்செய் விசையாதல்



நிறப்பிரிகைகளற்ற
தெளிவிசும்பென விரிந்து
வண்டுணாமலர் மீதும்
பரவி சுகிக்கும்
மென்வளி மனமுற்று
கைக்கொள்ளா கூலம்பெற்ற
வறியவன் விழிதேங்கும்
நீர்வகையறியும் நோக்கோடு
விதிக்கப்பட்ட எதையும்
தனக்குகந்த விதியென
மாற்றம்செய் விசையாகி
கரித்துத் தளும்பும்
முந்நீரளவு ஆழறிவுபெற்றும்
சமன்கொண்ட சூத்திரங்களுக்காய்
யுகங்களின் காத்திருப்பினை
மனமுவந்து கொண்டதுவும்
மாதர்பிறப்பெல்லாம்
பெருந்தவ நீட்சியென
பாழுலகுக்கு உரைத்திடவே