Friday 11 October 2013

துளிகள் பெரிதும் சிறிதுமாய்

பலநூறு சிறுசிறு
வண்ணக்குமிழிகள்
ஒருசேர
வெடிப்பதைப்போலவேதான்
முதலசைவு உணர்ந்தேன்
புன்னகைத்த பெண்மருத்துவர்
இதுதான் தொடக்கம்
என்றார்
அன்றிலிருந்து
இத்தனை அழகாய் இருக்கும்
தொடக்கங்கள் அனைத்தையும்
விரும்பத் தொடங்கியிருந்தேன்

-----------------------------------------------------------------------------------

மிகத் தெளிவாக
உணர்ந்தேயிருந்தேன்
அது கனவுதானென
உடல்முழுதும்
ஒருபக்கமாய் சரியும்
அவளை
வெகு விருப்பமாய்
கரங்களில் தாங்கிட
ஓடுகிறேன்
ஏனவள் இத்தனை
வசீகரித்து
தூரப்புள்ளியாய் மறைந்தாள்
என வினவும் முன்னரே
கனவு கலைய
விழிக்கிறேன்
இறந்துவிட்ட சமீப நொடியில்தான்
புகையாய் எவரோ
எழுந்து சென்றதைப்போல்
ஒரு பாரம்
மடியில்



--------------------------------------------------------------------------------------

பெரும்பெயலுக்கான
வலு அறிகுறிகள்
இரவு வானில்
உறங்கிவிட்ட
மகவெழுப்ப சித்தமில்லை
மாறாக
ஈரக்காற்று பட்டு
மெல்ல புரண்டு படுக்கும்
இந்த வரிகளை
என்செய்வதெனவும்
தெரியவில்லை


-------------------------------------------------------------------------------------

காட்சி மறைத்திட்ட
நீர்கோத்த விழிகளுடன்
”அவ்வாறெனில்.....நான் போகவா”
எனும் அந்த இறுதிக் கேள்விக்கு
“தாராளமாய்”
எனும் அந்த அலட்சியபதில்
உரைத்த உதடுகளையும்
முத்தமிட விரும்பியவளாகத்தான்
அப்போதுமிருந்தேன்
என்பது மட்டுமே
உன்மீது மிகு இரக்கம்
கொள்ள வைக்கிறது
இப்போதும்


-------------------------------------------------------------------------------------

விளக்கில் மோதி
சிறகுமுறிந்த ஈசலொன்று
இறுதியாய் சுவாசிக்கவும்
கற்றுத்தருகிறது
முதல் வரிக்கும்
இறுதி வரிக்குமிடையே
மழையில் நனைந்து
இருள்சொட்ட நிற்குமிந்த
இரவு


----------------------------------------------------------------------------------------

கடைவாயில்
அதக்கி வைத்த
சற்றேப் பெரிய கல்கண்டின்
கூர்முனைகளுரசி
உட்பக்கக் கன்னங்களில்
நேர்ந்த காயங்களாய்
நகர்ந்தது
அந்த இரவும்


------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment