Friday 8 August 2014

குற்றமற்றதன் புகல்

பயணப் பாதையில்
விசித்திரமாய் ஓசையிட்டு
மறையும் பறவையினுடையதைப் போல்
அந்தக் குரல்
அத்தனைப் புதியதாய் 
இருந்தது இன்று

இரண்டு ஜன்னல்களுக்கும் இடையே
இருந்த
அத்தனைத் தொலைவையும்
இந்த மழை
சிலந்தி உமிழ்ந்த இழைபோல்
இணைத்துக் கொண்டிருந்தது

கொஞ்சம் கொஞ்சமாய்
தழையத் துவங்கியிருந்தக் குரல்களின்
நிழலில்
ஆதியுணர்வை புதைப்பதுதான்
எத்தனைச் சிரமமாய்
இருந்து விடுகிறது?

நிலத்தின் வெம்மை
மெல்லிய நூலாடைபோல்
எழும்பத் துவங்கியதும்
மறுபக்கம் இருந்தத் துளிகள்
கூச்சமாய்
நெளிந்து விழுந்தன

குற்றமற்ற ஒன்றைப்
பொழிந்துவிட்டதன் ஆறுதலோடு
அந்தக் கடைசிச் சொல்
காற்றிலாடும்
ஒற்றை வர்ண ஒளிபோல்
மினுங்கி மினுங்கி
வளைமாற்றுப்புள்ளிக்குள்
நுழைந்தது

No comments:

Post a Comment