Wednesday 13 August 2014

கடலும் அவளும்

மேடாகி நிற்கும்
புதுத் தார்ச்சாலையின்
இருமருங்கும்
தயங்கித் தேங்கும்
மழைநீர் குழந்தையை
விரல் பிடித்து அழைத்துச் செல்லும்
முதியவன் போல்
தள்ளாடிச் செல்லும்
சிறுமியின்
ஒற்றைக் காகிதக்கப்பல்

-----------------------------------------------

கடல்வரைச் சென்ற
நதியை
உடலுக்குள் வீசிய புயல்
திசை திருப்புகிறது

மிரண்டு போகும்
நதி
மலைக்குகைகளுக்குள்
ஓடி ஒளிகிறது

நீங்களும் அதனை
அருவியென
அழைக்கிறீர்கள்

கடலில்
கலக்கும் அருவிகள்
நதியெனும் பெயரோடு
வருவதில்லை எனக்
கடல்கள் அறியும்

கடலென்பது
புவியீர்ப்புவசத்தால்
சற்றே தாழ்ந்திருக்கும்
அலையடிக்கும் அருவிதாம்
ஓடி ஒளியும்
நதியல்ல


--------------------------------------

சிறுமி கிளிஞ்சல்கள்
சேகரிப்பதுபோலவே
இவள்
இத்தனைக் காதல்களை
சேமித்திருந்தாள்

அலைகளின் இடையில்
கிளிஞ்சல்களை
வீசிவிட்டு நகர்பவளின்
கால்களைப் பற்றியிழுக்கும்
கடல் மேல்
அவள்
அதீத கருணையோடிருந்தாள்
அன்று


-----------------------------------------------
அதே பாவனைகளுடன்
அதே அலைகள்
அல்லது
புதிய அலைகள்
அதே கடல்
அதே பறவைக்கூட்டம்
அல்லது’
அவற்றின் வம்சாவளி இறகுகள்
அதே உடைந்த பானைகள்
அதே நண்டுகள்
அதே நண்டுகளின்
மிகப்பழைய கொடுக்குகள்
அதே மணலின்
அதே ஈரம்

பின்னர்
அதே அவள்
அல்லது
புதிய அவள்
முன்பொருமுறை நிகழ்ந்ததுபோல்
இன்றும் மூழ்கினாள்
அல்லது
இன்று வெளியேறினாள்


------------------------------------------

No comments:

Post a Comment