Friday 8 August 2014

மழை

தன்னைக் கடக்கும் 
மழையைத் 
தங்கச்சரடுகளாக்கி
வியந்து கொண்டிருக்கும்
தெருவிளக்கு

அதன் நெளிந்தோடும்
மஞ்சள் ஒளிப்புழுக்களைத்
உண்பதற்கு
சரேலென இறங்கும்
பறவையாய்
இந்தக் கூர் அலகு மழை

தெருவிளக்கையும்
மழையையும்
கவனியாது
ஒரு திரை போல்
அசையும் சில் இரவு


---------------------------
ஜன்னலின் மிக அருகே
எழுதப்படும்
இந்த வரிகளின்
முடிவில் தெறிக்கிறது
ஒரு துளி

வழிதவறி எங்கோ
சென்றுவிட்ட தன் மழலையை
தேடும் தாயென
வெளியே
அலறிப்பொழியும் மழை


---------------------

அசையும் மேடை மேல்
நடனமிடும்
பேரழகு நங்கைபோல்தான்
இந்த மழை
இந்த நொடி
அந்தக் கடல் மேல்
பொழிந்து கொண்டிருக்க வேண்டும்


----------------------------

சலனமற்றத் தவசிபோல்
இறங்கி வரும் மழை
ஆதியோடந்தம் தன்னைத்
திறந்து கொள்ளும் நிலம்
நொடிநேரக் கலப்பில்
பெரும் ராட்சசன் போல்
உருவாகும் மண்வாசம்
ஒரு மர்மப்புகையாய்
அனைத்தையும்
விழுங்கும்


----------------------------------

முதல் சீம்பால் போலும்
தொடக்கத்தில் கெட்டித்தும்
பின்னர் நீர்த்தும்
பொழிவதாய்
மாய்மாலம் செய்கிறது
இந்த
வெளிர்மஞ்சள் மழை


-------------------------

No comments:

Post a Comment