Friday 11 October 2013

விடைகள் வேண்டாம்

உங்களுக்கு விடைகள்
தெரிய வாய்ப்பில்லைதான்
கடற்கரை மணலில்
கண்ணீருடன் நின்றிருந்த
அவள் சொல்ல விரும்பியதென்ன?
ஆடைவிலகி நடைபாதையில்
போதைவிலகாது கிடந்த
தகப்பனைத் 
தோழிகளுடன் இருந்த
அவள் எப்படி கடந்து சென்றாள்?
ஒருகண உடல்பசிக்காய்
ஒழுக்கம் தவறியவள்
தூக்குக்கயிற்றை
எத்தனை முடிச்சுகளிட்டு
நெருக்கினாள்?
காதுகூசும் வசவுகளால்
அனைவரையும் சாடியபடியே
தெருவில் ஓடும் அவள்
எப்போது மனநிலை தவறினாள்?
பொட்டிட்டு மையிட்டு
அலங்கரித்த சிசுவை
பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல
எந்த நொடி முடிவெடுத்தாள்?
விடைகள் தெரியாதுதானே
அவள் விடைகளுக்காய்
காத்திருப்பதில்லை
வாழவோ சாகவோ
விடைகள் மட்டுமே’
போதுமானதாய் இருப்பதில்லைதானே

1 comment:

  1. entha kavitha nalla erukku, oru samuga sinthanayodu...

    ReplyDelete