Friday 11 October 2013

வலிகடத்தி

தொண்டையின் வெகுஅருகில்
அத்தனை நீள ஊசி
இறங்கியபோது
பெரிதாய் வலியில்லை
வெண்பஞ்சு ஒத்தி சிவப்பாய் எடுத்த
செவிலி ஆதுரமாய்
நெற்றி தடவுகிறாள்
முழுவீச்சில் செயல்பட்டு
அத்தனை சீழையும்
வெளிக்கொணர முயலும்
மருத்துவர் ஏன்
இத்தனை சாந்தமாய்
இருக்கிறார்
முடிவுகளை அவர்கள்
ஆராயும் வேளை
ஏதேனும் நகைச்சுவைக்காட்சி
ரசித்து சிரித்துக்கொண்டிருப்பாள்
நாளையும் வருவாள்
அதே புன்னகையோடு
ஊசி இறங்கும்முன்
செவிலியின் கரம்பற்றி
அழுத்துவாள்
வலிகடத்தியதாய் நம்புமவளை
கண்டு காற்றில் படபடக்கும்
மருத்துவமனை நாட்காட்டி

No comments:

Post a Comment