Friday 11 October 2013

சுலப மழை

மழைக்கவிதைஎழுதுவது
அத்தனை சுலபமில்லை
பொழியத் தொடங்கியதும்
பெருநகரப் பிற இரைச்சலில்
மழையோசை கேட்பதில்லை
மண்வாசம் வருவதற்கு
வாய்ப்பேயில்லை
எங்கோ சமையலறை மூலை
இருப்பவளை ஈரக்காற்று
உசுப்பியெழுப்பும்
தொடர்ந்தும் ரசிக்க இயலாது

உலர்ந்த துணிகளும்
காயவைத்த
மிளகாய் வற்றலும் அள்ளி
மொட்டுவிட்ட ரோஜாச்செடி
பெருமழையில் உடைந்திடாது
பாதுகாத்து
மழையில் செல்லாதவாறு
மகவைக் கட்டுப்படுத்தி
ஜன்னல் கதவுகள்
காற்றில் அறையாதிருக்க
கொக்கிகள் மாட்டும் வேளை
மழை ரசிக்கக் கிடைக்கும்
சில வரிகளைத் தூறிச் செல்லும்
எழுத எத்தனிக்கும் வேளை
எங்கிருந்தோ வரும்
தேநீர் கொதிக்கும் வாசம்
சமையலறை இட்டுச் செல்லும்
மறுபடியும்
எனினும்
ஒருகையில் தேநீர் கோப்பையும்
மறுகையில் நின்றுபோன மழையுமாய்
மழைக்கவிதை எழுதுவதுதான்
எத்தனை ரம்மியமாய்
அமைந்து விடுகிறது

No comments:

Post a Comment