Monday 25 August 2014

சிங்கமுகன்

மீண்டும் கதை சொல்லத் 
துவங்குகிறார் வழிகாட்டி
பிளந்து கிடந்த மலையின்
இடையே 
ஒரு மொட்டுபோல் எழும்பியிருந்தது
அந்தக் கோயில்

சிங்கமுக தெய்வம்
அரக்கனொருவனை
மலைமுழுதும் சுழற்றியடிக்கிறது
சமர்புரிந்த இடங்களிலெல்லாம்
கோயில் கொள்கிறது

தெறித்து விழுந்த
அரக்கனின் கண்மணிகளை
இறகு முழுதும் தெளித்தாற்போல்
சிறு பொட்டுகளுடன்
ஒரே வண்ணப்
பட்டாம்பூச்சிகளைக் காண்கிறேன்

கோவில் மதிற்சுவர் சிதைத்து
முளைத்திருக்கும் செடியின் மலரில்
வறண்டு கிடந்த குளத்தில்
கோவில் படிகளில்
ஈச்சம்பழம் விற்கும் சிறுமியின் கூடையில்
இரக்கத்திற்காய் பெருநோய்க்காரன்
திறந்து வைத்திருந்த அழுகிய பாதங்களில்
என
எங்கும் அதே பட்டாம்பூச்சிகள்

கதைசொல்லி முடித்து
கட்டணக்கழிவறை நோக்கி விரையும்
அவரையும்
ஒரு பட்டாம்பூச்சி கடந்து செல்கிறது

பட்டாம்பூச்சிகளின் நிலத்தில்
சமர் செய்த சிங்கமுகனை
அவை
மன்னிக்கத் தயாரில்லை
என்பதை
அவர் சொல்லவேயில்லை

கோவில் வளாகத்துள்
எங்குமே
பட்டாம்பூச்சிகள்
இருக்கவில்லை

No comments:

Post a Comment