Thursday 18 September 2014

அச்சத்தில் தெய்வங்கள்

எதிர்சாரியில் கடந்த
வாகனத்தை ஓட்டியது
சாட்சாத் கண்ணனேதான்
சிமிட்டிய விழிகளில்
அத்தனை தெய்வாம்சம்
மிக நிதானமாய்
பல்சரில் சென்ற ராமரின்
பின்னிருக்கையில்
அவர் மனைவி
ராமர் ரியர்வியூ கண்ணாடியில்
ஒருமுறை
ஒரேமுறை
பார்த்துவிட்டு இடப்பக்கமாய்
சென்றுவிட்டார்
மாநிறமாய் முருகனை
இன்றுதான் கண்டேன்
பேருந்தின் பின்னிருக்கையில்
இருந்து
பாசிமணி விற்கும் குறத்திகளை
ரசித்துக் கொண்டிருந்தார்
வேல் இருக்கவில்லை
லக்கேஜ் சார்ஜ்க்காய்
பயந்திருப்பார் போலும்
புலித்தோல் அணிவது
சட்டப்படி குற்றம்
கான்கிரீட் வனத்தில்
பாம்புகள் கிடைப்பதில்லை
இருக்கும் சிலதும்
சினிமாப்படங்களில் நடிக்கச்
சென்றுவிட்டதால்
ஈசன் மிகத்தனியாய்
நின்றுகொண்டிருந்தார்
தேநீர் கடையில்
ஆலகால விடத்தைவிட
கஷ்டப்பட்டுத் தேநீரை
விழுங்கிக்கொண்டிருந்தார்
சாவகாசமாய்
தெருக்களில் திரிந்து
கொண்டிருந்தார் பிள்ளையார்
காலை நடைப்பயிற்சியின்
தொந்திகளை வியந்துகொண்டே
ஐந்து ரூபாய்க்கென
கடைகளில் தும்பிக்கையை
நீட்டிக்கொண்டிருந்தவரின்
நினைவில்
காடுகள் இல்லை
மிருகங்கள் இல்லை
எலிகளேனும் இருந்தனவா
தெரியவில்லை
தெருக்களில்
தெய்வங்கள்
தென்படத் துவங்குவதாய்
செய்திகள் அலறியதும்
கோவில்களில்
முன்னெப்போதையும் விட
அதிகக்கூட்டம்
கூட்டத்தினுள்ளும்
தெய்வங்கள் இருந்தன
அச்சத்தில் நடுங்கியபடி

No comments:

Post a Comment