Sunday 13 July 2014

பச்சை சம்பங்கி

பச்சை சம்பங்கியை
அந்தப் பூக்கடையில்
பார்த்ததில்
மிகுந்த அதிர்ச்சி

எல்லா மலர்களும்
விற்பனைக்கு வருவது
ஏன் அத்தனை
உவப்பானதாய்
இருப்பதில்லை?

----------------------------------------


குளிரூட்டப்பட்ட
காய்கறிக்கடையின்
வாசலில் குழறியபடி
பால்யகாலத்தின்
ரிக்‌ஷாக்காரர்

வெண்டையின் நுனிகள்
மிக
மிக
மிக
நிதானமாக
உடைந்து விழுகின்றன

-----------------------------------------
இந்தப்
பெருமழையின் பின்
மாநகரத்தில்
மிருதுத்தன்மை
கூடியிருக்கிறது

மொட்டைமாடி 
துணி உலர்த்தும்
கம்பியை
உரசிச் சென்ற
பேரிடி
இறுதியாய்
எங்கு முடிந்திருக்கும்


------------------------------------------

எனக்கான பட்டாம்பூச்சிகள்
எல்லாம்
சிகப்பு மரவட்டைகளாக
மாறிவிட்டிருந்தன

ஒவ்வொரு மழைக்காலையிலும்
கதவிடுக்குகளில்
நசுங்கி இறந்துகிடக்கும்
சிகப்பு மரவட்டைகள்
சிறகுகளைத்
தொலைத்த கதைகளைதான்
என் புத்தகங்களில்
இன்றும் தேடினேன்


-------------------------------------------

பழுப்பும்
மஞ்சளும் பச்சையுமாய்
விரிந்து கிடக்கும்
வாசல் மரத்தைத்தான்
மயிலென
உருவகித்திருந்தாள் சிறுமி

முதன்முறையாய்
மயிலம் கோவிலில்
கூண்டிற்குள்
மயிலைக் கண்டதும்
கூண்டு தேவைப்படாத
மரத்தினை எண்ணி
ஆசுவாசமடைகிறாள்


---------------------------------------

No comments:

Post a Comment