Sunday 13 July 2014

நிதானமாய் எரியத் துவங்குகிறது சிதை

நீண்ட நேரமாய்
ஒரு தனிமைக்குக்
காத்திருந்தாற் போல்
கடைசி ஆளும்
சென்று விட்டபிறகு
நிதானமாய்
எரியத் துவங்குகிறது
சிதை

-------------------------------------------

தன் வயிற்றில்
ஜனித்த சிசுவின்
எரிப்பிற்குப் பின்
பானையில் எஞ்சியிருக்கும்
சாம்பல்

எரியாத மூட்டெலும்பை
நுகர்ந்து பார்க்கத்
தவிக்கும் அவளை
குரூரமானவள் எனச்
சொல்வீர்களா
நீங்கள்

-----------------------------------------------

மருத்துவர்
உறுதி செய்வதற்கும்
இறுதி சிறுநீர் 
பிரிவதற்கும்
இடையே
சில நொடிகள்
இருந்ததென்பது
மட்டுமே
மூர்ச்சையாவதற்கு முன்னதான
அல்லது பின்னதான
அவளின்
ஒரே சிந்தனை

-----------------------------------------------

கரையில்
மிக லாவகமாய்
கால்களை நீட்டி
கடலில் இருந்து
பிரிந்து வந்த
ஒற்றை அலைபோல்
அமர்ந்திருக்கிறாள் அவள்

அவளின்
குழந்தை அலை
தவழ்ந்து தவழ்ந்து
எப்போதோ
நடுக்கடலுக்குச்
சென்று விட்டிருந்தது


----------------------------------------------

No comments:

Post a Comment