Sunday 13 July 2014

வாயிற்காப்பாளன்போல் சம்பிரதாயப் புன்னகை

சாளரத் துளைகள் மூலமாய்
பாயும் ஒளிக்கீற்றுகளின்
இடையே
மறித்து வைத்து
இரத்தச் சிவப்பாகும்
கை விரல்களை
வியந்து நோக்குகிறாள்
சிறுமி

இறுதி வெளிச்சத்தைக்
கடந்து கொண்டிருந்த
கடைசி பறவை
ஒரு கணம்
நிதானித்துவிட்டு
திசை மாறுகிறது


-----------------------------------

துளிர்த்த நாள்
முதலாய் உதிரத்
துவங்கியதுபோல்
அத்தனை
ஆயாசத்துடன் கிடக்கும்
சில சருகுகள்

உதிர்ந்த நொடியே
மலர்ந்து
விட்டதைப்போல்
அருகில் ஒரு மலர்

மிகச் சரியாய்
தண்ணீர் லாரியின்
சக்கரங்கள்
காலத்தை அரைத்துப்
பயணிக்கின்றன


-----------------------------------------

நேற்றையக் குயிலின் குரல்
ஒரு இறகுமெத்தை போல்
படர்ந்து கிடந்த
மரக்கிளையில்
அடிவயிற்றின்
மென் உரோமங்கள் உரச
தணிந்து கிடக்கிறது
தாய்ப்பூனை


-------------------------------------------

சிறுமழையின் பின்
படிகளில் ஓடிவரும்
நீரைச் சிறு ஓடையென
எண்ணுகிறாள் சிறுமி
கொஞ்சம் புற்கள்
சில மீன்கள்
தூர மலையும்
வெறிக்கும் மேகமும்
வரைந்த பிறகு
ஓடையைத் தாண்டிச் 
செல்கிறாள்

அவளின் சாலையில்
கடல்
காத்திருந்தது


-------------------------------------------
பிணைத்திருந்த
உள்ளங்கைகளில்
ஒவ்வொரு விரலாய்
பிரித்தபின்னர்
ஒரு பிரிவு சாத்தியமானதுதான்
அன்று உண்ட
திராட்சை ஏன்
அத்தனைப் புளிப்பாய்
இருந்தது என விவாதிக்கவும்
இருவரும் மறந்திருந்தோம்
ஒரு வாயிற்காப்பாளன்போல்
சம்பிரதாயப் புன்னகையுடன்
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கும்
அந்த
இறுதி முத்தத்தைத்தான்
என்ன செய்வதென்று
இருவருக்கும்
தெரியவில்லை
இன்றுவரை


-------------------------------------------

No comments:

Post a Comment