Tuesday 16 July 2013

இரவுகள் ஆன அவள்

இரவுகள் ஆன அவள் 
------------------------------

கருவண்ணக் கண்ணாடி வளைகள்
அணிவதில் அதீத விருப்பம்
வளைகளின் இடையில்
சப்தமிடுவது
இரவுகளாய் இருந்திடின்
நொறுங்குதல் குறித்தும்
கவலையேதுமில்லை
-----------------------------------------------------

மழையிரவு
கிளரும் வாசங்களில்
எதையும்
பாகுபடுத்த இயலுவதில்லை
பொல்லாக்காமம் மட்டும் 
நாசி நிரப்பி
புன்னகைத்துச் செல்கிறது
மழைத்துளி வசமாய்
-------------------------------------------------------
வனங்களுக்கான
பெருமழை காணக்
கிடைத்தது
நனைதலுக்கான பெருவனம்
எங்கேனும்
உறங்கிக்கொண்டிருக்கலாம்
எழுப்ப வேண்டாம்
தண்மழை வழியறியும்
-------------------------------------------------------

ஆம்
வேறுபாடு உண்டுதான்
இலைநுனி தேங்கி
நிர்மால்யமாய் வீழும்
ஒற்றைத்துளிக்கும்
குடைக்கம்பி முனை
இறுகித் தவிக்கும்
அந்தத் துளிக்கும்
வேறுபாடு உண்டுதான்
மழையே சொன்னது
--------------------------------------------------------

கிறங்கித் தவிக்கும்
மாநகரத் தொட்டிச்செடி
சர்வ வல்லமையோடு
இறங்கிப் பொழியும்
வனமழை
--------------------------------------------------------

No comments:

Post a Comment